Skip to main content

கூகுள் மேப்பால் குளறுபடி; பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்த லாரி

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

driver left the truck inside the bus station looking at Google Maps

 

ஈரோடு மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன் நேற்று கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலைக்கு பெங்களூரிலிருந்து ரசாயன மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூர் வழியாக கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கு வழியில் சிப்காட் வளாகத்திற்கு விரைவாக செல்வதற்காக கூகுள் மேப் வழிகாட்டியைப் பயன்படுத்தி அதன்படி லாரியை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். 

 

கடலூர் நகரில் உள்ள முதுநகர் இம்பீரியல் சாலை வழியாக வந்த அவர் ஒரு வழிச் சாலையாக உள்ள லாரன்ஸ் ரோட்டுக்கு சென்று அங்கு திருப்பாப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதை இருப்பதைப் பார்த்த அவர்,  அதற்கு மேல் செல்ல முடியாமல் லாரியை திருப்பி பஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார். பஸ் நிலையத்தில் காத்திருந்த மக்கள், பஸ், ஆட்டோ டிரைவர்கள் பஸ் நிலையத்துக்குள் சரக்கு லாரிக்கு என்ன வேலை என்று லாரி டிரைவரிடம் சத்தம் போட்டுள்ளனர்.

 

அப்போது லாரி டிரைவர் பயத்தோடு “நான் இந்த ஊருக்கு புதிதாக சரக்கு லாரி ஓட்டி வருகிறேன். கூகுள் மேப் வழிகாட்டியபடி இங்கு வந்து சிக்கிக்கொண்டதாகக்” கூறியுள்ளார். லாரி டிரைவரை பார்த்து பரிதாபப்பட்ட அவர்கள் சற்று பின்னால் சென்று பஸ் நிலையத்திற்குள் இருந்து திரும்பிச் சென்று சிதம்பரம் சாலை வழியாக சிப்காட் பகுதிக்குச் செல்லுமாறு வழிகாட்டியுள்ளனர். அதன்படி அந்த லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.

 

பஸ் நிலையத்திற்குள் சரக்கு லாரி உள்ளே புகுந்ததைக் கண்டு பொதுமக்களும் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளனர். இதனால் கடலூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூகுள் மேப் வழிகாட்டி சில நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். அதன் வழி நான்கு சக்கர, இருசக்கர வாகனங்களில் நீண்ட தூரம் செல்பவர்கள் ஆங்காங்கே அப்பகுதி மக்களிடம் வழி கேட்டு அதன்படி செல்வார்கள். கூகுள் மேப்பால் வழி தெரியாமல் தடுமாறும் நிலையும் ஏற்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.