ghj

பேருந்தில் தவறவிட்ட 60 கிராம் நகையைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

Advertisment

சென்னை மாநகரப் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநராக இருப்பவர்கள் குணசீலன், குணசேகரன். இவர்கள் நேற்று (13.12.2021) வழக்கம்போல் வண்டியை இயக்கிவந்த நிலையில், உணவு இடைவேளைக்காக வண்டியிலிருந்து வெளியே வந்துள்ளார்கள். அப்போது சீட்டின் அடிப்பகுதியில் பை ஒன்று கிடப்பதை இருவரும் பார்த்துள்ளனர். பயணிகள் யாரேனும் பர்சைத் தவறவிட்டுப் போயிருப்பார்கள் என்ற நோக்கில் அதை எடுத்துப் பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Advertisment

உள்ளே 60 கிராம் மதிக்கத்தக்க அளவுக்கு தங்க நகைகள் இருந்தன. இதனால் செய்வதறியாது திகைத்த அவர்கள், உடனடியாக இதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் இதுதொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் உரியவரிடம் அந்த நகைகளை ஒப்படைத்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியறிந்த போக்குவரத்து கழக இயக்குநர், அவர்களை அழைத்து சால்வை அணிவித்துப் பரிசு பொருட்கள் கொடுத்து பாராட்டினார். இந்த சம்பவம் போக்குவரத்து தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.