Driver arrested for Pudukottai dt Aranthangi area Vellaru sand lorry incident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதி வெள்ளாற்றில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வெளியூர்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேக்கு தகவல் கிடைத்துள்ளது. இன்று (25.10.2024) காலை அறந்தாங்கி பகுதியில் இருந்து 3 யூனிட் மணல் ஏற்றிய ஒரு டிப்பர் லாரி வடகாடு காவல் சரகத்திற்கு வரும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேயின் தனிப்படை உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் ஆலங்காடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது எந்தவித ஆவணங்களும் இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இந்த லாரியை மூக்குடி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் கணபதி ஓட்டி வந்துள்ளார். மணல் லாரி மற்றும் லாரி ஓட்டுநரை வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வடகாடு போலிசார் மணல் லாரியை கைப்பற்றிய போலிசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர்.