கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளதாலும்,அந்தக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குவதாலும், கரோனோ வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் சென்னையில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர்சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் பார்களை மட்டும் மூட டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கறிஞர் முருகன் என்பவர் இந்த வழக்கில் இடையிட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், உலக சுகாதார நிறுவனம் குடிப்பழக்கத்தை ஒரு நாள்பட்ட நோயாக வகைப்படுத்தியுள்ளதாகவும், குடிப்பழக்கத்தை நிறுத்த தனிப்பட்ட ஒரு சிகிச்சைமுறை ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது மனித நேயத்தோடு இந்த விவகாரத்தை அணுகி குடிப்பவர்களைப் பாதிக்காத வகையில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் மதுக்கடைகளை திடீரென மூடக் கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மதுக் கடைகளை மூடக் கூடாது எனக் கோரி வழக்கறிஞர் முருகன் தாக்கல் செய்துள்ள இந்த இடையீட்டு மனு, டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தொடர்ந்த வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.