Dr Ramdas seeks dismissal of defamation suit - Notice to RS Bharathi again!

தனக்கு எதிராக தி.மு.க தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்திருக்கிறது. அந்த இடத்தின் மூலப் பத்திரத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அடிப்படை ஆதாரம் இல்லாமல் தி.மு.க மீது குற்றச்சாட்டை முன்வைத்த பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு எதிராக, முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ் பாரதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மேலும், முரசொலி அறக்கட்டளையின் மூலப்பத்திரத்தை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், அவதூறு வழக்கில் மார்ச் 20 -ஆம் தேதி நேரில் ஆஜராக ராமதாசுக்கு உத்தரவிட்டது.

Advertisment

இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், தன்மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் ராமதாஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Ad

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர் ராமதாஸ் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விளக்களித்தும், மறுஉத்தரவு வரும் வரை அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பில் யாரும் ஆஜராகாததால், அவர்கள் தரப்புக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை அக்டோபர் 5- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.