ராமநாதபுரம் மாவட்டம் வீரமாய்ச்சன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா. இவருக்கும் விவசாய தொழில் செய்து வரும் முனிஷ்வரன் என்பவருக்கும் இடையே 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி உள்ளது. இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ரஞ்சிதாவிடம் வரதட்சணை கேட்டு அவரது கணவர் முனிஷ்வரனும், மாமனார் அண்ணாதுரையும் (வயது 60) துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் மனமுடைந்த ரஞ்சிதா நேற்று (22.07.2025) இரவு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முன்னதாக அவர் அளித்துள்ள மரண வாக்குமூலத்தில் வரதட்சணை கேட்டு மாமனார் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் தொடர்ந்து பெண்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வரதட்சணை கொடுமையால் ராமநாதபுரத்தில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது