கோடை வெயிலின் தாக்கமாக பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகி வரும் நிலையில் பல மாவட்டங்களில் கோடையை தணிக்கும் வகையில் காற்றுடன் கன மழையும் பொழிந்து வருகிறது. நேற்று மதுரையில் பெய்த கனமழையில் மின் வயர்கள் அறுந்து விழுந்ததை மிதித்து தம்பதி இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்தநிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் திருச்சியிலும் நிகழ்ந்துள்ளது. திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் சூர்யா என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டம் உள்ளது. இதில் பணியாற்றி வந்த செல்வி, ராதிகா இருவரும் தோட்டத்திற்கு உரம் வைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது பெய்த கனமழை காரணமாக அறுந்து கிடந்த மின் வயரை தெரியாமல் மிதித்ததில் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.