Skip to main content

மாணவர்களை படி படி என்று விரட்டாதீர்கள்: சார்-ஆட்சியர் கே.எம்.சரயு பேச்சு

Published on 15/03/2018 | Edited on 15/03/2018
Collector 1


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குளிர்சாதன வகுப்பறை திறப்பு விழா மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை அ.கிறிஸ்டி வரவேற்றுப் பேசினார்.. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னழகு, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சீனி.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளிர்சாதன வகுப்பறையை திறந்து வைத்து சார் ஆட்சியர் கே.எம்.சரயு பேசியதாவது:

இந்த பள்ளி மாணவர்கள் என்னை சீருடையில் வரிசையாக நின்று வரவேற்கும் போது இது அரசுப் பள்ளி தானா என ஆச்சர்யப்பட்டேன்.. இந்த பள்ளியில் குளிர்சாதன வகுப்பறை, நூலகம், புரஜெக்டர் ஆகியவற்றோடு இருப்பது அவ்வளவு நன்றாக உள்ளது. என்னால் நம்ப முடியவில்லை ஒரு தொடக்கப் பள்ளியில் இவ்வளவு வசதிகள் இருப்பதை பார்த்து.. மேல் நிலைப்பள்ளிகளில் நிறைய பேர் நன்கொடை வழங்குவார்கள்.. ஆனால் ஒரு தொடக்கப் பள்ளியில் இவ்வளவு என்றால் பெரிய விஷயம் தானே. முன்பெல்லாம் தனியார் பள்ளி விழாக்களுக்கு செல்வேன். இப்பொழுது செல்வது கிடையாது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதே எனது நோக்கம். தனியார் பள்ளி விழாக்களில் மாணவர்கள் நாம் பேசுவதை கூட கவனிக்காமல் நண்பர்களோடு பேசுவார்கள். ஆனால் இங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் அவ்வளவு அமைதியாகவும் ஒழுக்கமாகவும் இருப்பதை பார்க்கும் பொழுது மனம் மகிழ்வாக உள்ளது.

ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து நீங்கள் உங்களை நல்ல ஆசிரியராக மாற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அரசுப் பள்ளியை இப்படி உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாது. இதை விட இன்னும் உயர்ந்த நிலைக்கு இப்பள்ளியை கொண்டு செல்ல வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பாமல் அரசுப் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் எண்ணத்தை ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும். நானும் ஓர் அரசுப் பள்ளியில் தான் பயின்றேன். அப்பொழுது எல்லாம் பாட புத்தகங்கள் தான் இலவசமாக கொடுத்தார்கள். இன்று உள்ள வசதிகள் அப்பொழுது கிடையாது. இன்று உள்ள ஆசிரியர்கள் அரசு வழங்கும் வசதிகளை நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். அரசு பள்ளியில் பயிலும் குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர ஆசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும். நல்ல குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்படி நல்ல குழந்தைகளை அனுப்பும் போது நீங்கள் அனுப்பும் குழந்தைகள் இந்த உலகத்துக்கே நல்ல நபராக தேர்ந்தெடுத்து அனுப்பியவராக இருப்பார்கள்.
 

Collector 2


நானும் நிறைய அரசுப் பள்ளிகளுக்கு சென்று வந்துள்ளேன்.. அப்பொழுது ஆசிரியர்களின் குறைகளை கண்டு அறிவுரை கூறி தான் வந்துள்ளேன். பெற்றோர்களாகிய உங்களுக்கும் நிறைய பொறுப்பு உள்ளது. பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து ஒரு மணி நேரமாவது குழந்தைகளிடம் பெற்றோர்கள் கலந்துரையாடுங்கள். ஆசிரியர் என்ன சொன்னாங்க, நண்பர்கள் என்ன செய்தார்கள் என கேளுங்கள்.. படி படி என்று சொல்லாதீங்க.. அவர்களிடம் பேசுங்கள் அவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கும். அவர்கள் அதை அம்மாவிடம் அப்பாவிடம் கூறி தீர்வு காண நினைத்திருப்பார்கள்.. அவர்கள் உங்களை சார்ந்து இருப்பார்கள்.. எனவே குழந்தைகளிடம் நல்ல நண்பர்களாக பெற்றோர்கள் இருந்து பேசுங்கள். ஆசிரியர் சொல்வதை கேட்க சொல்லுங்கள், பெரியோர்கள் சொல்வதை கேட்க சொல்லுங்கள்.. நீங்களே ரோல் மாடல்களாக இருங்கள் கண்டிப்பாக நம் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வருவார்கள் என்றார்.

மேலும் அரசுப்பள்ளிக்கு குளிர்சாதன வசதியை ஏற்படுத்தி கொடுத்து இன்று திறப்பு விழாவிற்கு வருகை தந்துள்ள பெங்களூரைச் சேர்ந்த ஜஸ்டின் அலங்காரம் - ப்ரியா ஜஸ்டின் ஆகியோருக்கு ஊர் சார்பாகவும் பள்ளி சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தலைமை ஆசிரியர் கிறிஸ்டி கூறியதாவது: எங்களது பள்ளி மேலூரில் தனியார் பள்ளி வேன்கள் அதிகமாக வந்து பிள்ளைகளை அழைத்துச் செல்லும் நிலை இருந்தது. இந்நிலை மாற வேண்டும். நம்ம ஊர் பிள்ளைகள் நம் பள்ளியில் படிக்க வேண்டும் என முடிவு செய்து அனைத்து வசதிகளையும் பள்ளியில் ஏற்படுத்தினேன்.. மேலும் வெயில் காலம் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடையூறாக இருப்பதை அறிந்தேன்.. அந்நிலை மாறி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைய முகநூலில் உள்ள நண்பர்கள் மூலம் நன்கொடை பெற்று வகுப்பறையை குளிர்சாதன வகுப்பறையாக மாற்றியுள்ளேன். அரசு பள்ளி குறைவானது என்ற எண்ணத்தை மாற்றி அரசு பள்ளி தான் உயர்ந்தது என்ற எண்ணத்தை பெற்றோர்களிடம் ஏற்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதே தனது எண்ணம் என்றார்.

மேலும் குழந்தை நேய கற்றல் முறையில் தற்பொழுது 1 முதல் 3 வரை உள்ள வகுப்புகளுக்கு ஓர் குளிர்சாதன வகுப்பறையும், 4 முதல் 5 வரை உள்ள வகுப்புகளுக்கு ஓர் குளிர்சாதன வகுப்பறையாகவும் எம் பள்ளி மாற்றப்பட்டுள்ளது என்றார்.

சார்ந்த செய்திகள்