Skip to main content

''கண்ணீர் வேண்டாம்... இதயங்களை வென்றிருக்கிறார்கள்...''-மகளிர் ஹாக்கி அணிக்கு பா.ம.க. சார்பில் ரூ.10 லட்சம் பரிசு!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

Don't cry ... have won hearts ... P.M.K. Rs 10 lakh prize

 

டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றுள்ளார். பி.வி. சிந்து பேட்மிண்டனில் வெண்கலமும், ரவிக்குமார் தஹியா மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

 

PM Modi To Rani Rampal-Led Women Hockey Team

 

மேலும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றுள்ளது. இந்தநிலையில் இன்று (06.08.2021), இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்திற்காக பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியா 3 - 4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதனால் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டது. இந்நிலையில் இன்று மகளிர் ஹாக்கி அணியிடம் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்பொழுது அணி வீராங்கனைகள் கண் கலங்கினர். அப்பொழுது பிரதமர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

 

PM Modi To Rani Rampal-Led Women Hockey Team

 

போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் நீங்கள் உங்களைப்போன்று சாதிக்க நினைக்கும் பலருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளீர்கள் என பிரதமர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்கள் கண்கலங்கிய காட்சிகள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு, அவர்களுக்கு ஆறுதல்களும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பாமக இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் ஹாக்கி பிரிவில் இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கலங்கியது மிகவும் வேதனை அளிக்கிறது.

 

அவர்கள் போட்டியில் தோற்றிருக்கலாம் ஆனால் இந்தியர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கண்ணீர் விடவோ, கவலைப்படவோ தேவையில்லை. மாறாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பெருமிதம் கொள்ளவேண்டும்.

 

ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளின் அரைஇறுதி ஆட்டம் வரை இந்திய மகளிர் அணியினர் முன்னேறினார்கள். ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வரலாற்றில் இந்திய அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதிபெருவது இதுவே முதல்முறை ஆகும். இந்திய அணியை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை ஆகும். இதுஒரு சாதனை என்பது கோடிக்கணக்கானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் இந்த சாதனையை படைப்பதற்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் அனுபவித்த வலியும், வேதனையும் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது.

 

PM Modi To Rani Rampal-Led Women Hockey Team

 

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் பங்கேற்ற இந்தியா தவிர்த்த பிற நாட்டு அணியினருக்கு உலகத்தரம் வாய்ந்த பயிர்ச்சி வழங்கப்பட்டது. ஆனால் இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை. மிகவும் நெருக்கடியான சூழலில் போதிய வசதிகள் இல்லாத உள்ளூர் மைதானங்களில்தான் அவர்கள் பயிற்சிபெற்றனர். பிற நாட்டு அணிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஸ்பான்ஷர்ஷிப் கிடைத்தன. ஆனால் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு அத்தகைய உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒதிஷா மாநில அரசுதான் சில கோடிரூபாய் உதவிகளை வழங்கியது. அதுவும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஓர் அணியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதல்ல.

 

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு மிகப்பெரிய அளவில் ஒலிம்பிக் அனுபவம் இல்லை. இதுவரை இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்றிருக்கிறது. இதுதான் அவர்களின் மூன்றாவது ஒலிம்பிக் போட்டி ஆகும். ராணி ராம்பால் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள 16 வீராங்கனைகளில் 8 பேருக்கு இதுதான் முதல் ஒலிம்பிக் போட்டி ஆகும். மற்றொருபுறம் வந்தனா கட்டாரியா என்ற வீராங்கனையின் வீட்டுமுன் சிலர் வன்முறையில் ஈடுபட்டதால் இந்திய வீராங்கனைகள் அனைவரும் கடுமையான மனஉளைச்சலில் இருந்தனர். இவ்வளவு நெருக்கடிகளையும் இடர்ப்பாடுகளையும் தாங்கிக்கொண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணி அரைஇறுதி வரை முன்னேறியதும், ஆஸ்திரேலியா போன்ற உலகின் வலிமை வாய்ந்த அணிகளை வீழ்த்தியதும் இந்திய மகளிர் ஹாக்கி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய சாதனை ஆகும்.

 

இந்தியாவின் பெருமைமிகு மகள்களே... மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தின் முதல் பாதிவரை வலிமை வாய்ந்த பிரிட்டன் அணியைவிட அதிக கோல் அடித்து நீங்கள்தான் முன்னணியில் இருந்தீர்கள். கடைசியில்தான் ஆட்டம் திசைமாறியது. விளையாட்டுகளில் இது இயல்புதான். இதற்காக நீங்கள் கலங்க வேண்டாம். இன்றைய போட்டியில் தோற்றதற்காக கண்ணீர் விட்ட நீங்கள் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று ஆனந்த கண்ணீர் விடப்போவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. அதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இப்போதே எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணியினரின் போர்க்குணமிக்க ஆட்டத்தை பாராட்டும் வகையில் இந்திய அணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக்கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.