நேற்று பாமக எம்எல்ஏ அருளுக்கு பாமக துணைச் செயலாளர் பதவியை ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில் அருளை சேலம் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் பேசுகையில், ''96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தவன் நான். நிர்வாகிகளுக்கு நான் வழங்கிய பொறுப்புதான் நிரந்தரப் பொறுப்பு. அவர்களுக்கு நல்ல பொறுப்புகளை நான் கொடுத்திருக்கிறேன். இந்த பொறுப்புகள் நிலைத்து நீடித்து இருக்கும் என்றும் அவர்களிடத்தில் நான் சொல்லியிருக்கிறேன். இது தற்காலிக பொறுப்பா என்ற அச்சம் இருப்பவர்களுக்கு நான் கொடுத்தது நிரந்தர பொறுப்பு என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர்களுடைய அச்சத்தையும் போக்கி இருக்கிறேன். நான் வளர்த்த இந்த கட்சிக்கு நான் தான் தலைவர்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'உங்களுடைய 60-வது திருமண விழாவில் எல்லோரும் கலந்து கொண்டனர். அன்புமணி ராமதாஸ் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லையே' என்ற கேள்விக்கு, கேள்வி கேட்ட செய்தியாளரை நோக்கி, ''உங்க 25 வது திருமண விழாவிற்கு நீங்கள் பெற்றப் பிள்ளைகள் வரவில்லை என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும். அதே மனநிலை தான் எனக்கும்'' என்றார்.
போஸ்டர் கிழிப்பு குறித்த செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, ''யாராவது விஷமிகள் செய்திருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை போஸ்டர் ஒட்டலாம். ஆனால் அதைக் கிழிக்க கூடாது. அது நல்ல பண்பாடு அல்ல. ஏதோ விஷமிகள் இப்படி செய்து உங்களை கேள்வி கேட்க வைப்பதற்காக இப்படிச் செய்திருக்கலாம்'' என்றார்.
முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா, கலைஞரை கொச்சைப்படுத்தும் வகையில் வெளியான வீடியோ குறித்த கேள்விக்கு, ''தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டு செய்த தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளங்களில் வாழ்ந்த தலைவர்கள் யாராக இருந்தாலும், எந்த தலைவராக இருந்தாலும் அவர்களை கொச்சைப்படுத்துவது கூடாது. இதை அரசியல் கட்சி நடத்துகின்ற எல்லோருக்கும் என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். எந்த தலைவரையும் கொச்சைப்படுத்தக் கூடாது. கொள்கையில் வேறுபாடுகள், மாற்றங்கள், அவர்கள் சொன்ன கருத்துக்களில் ஒவ்வாமையாக இருந்தாலும் அந்த கருத்துக்கு மாறுபடுகிறேன் என்று சொல்லலாமே தவிர, அந்த தலைவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது'' என்றார்.