Skip to main content

எஜமான் குடும்பத்தை காப்பாற்ற உயிர் விட்ட செல்லப்பிராணி

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

Dog bitten by snake video goes viral

 


நம் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை நாம் குழந்தை போல், பார்த்துக் கொள்வதால், நம் மீது உயிரையே வைக்கின்றது. ஆனால்,  ஏதோ ஒரு கட்டத்தில் தங்களை வளர்க்கும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக,  உயிர்த் தியாகம் செய்யும் சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. திரைப்படங்களில் இந்த காட்சிகளை அதிகம் கண்டிருப்போம்.  அதே போல ஒரு துயரமான சம்பவம் தான், தற்போது புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ளது குறிஞ்சிப்பட்டி கிராமம்.  இந்த பகுதியில் வசிக்கும் ஜெயந்த் என்பவர், அவருடைய வீட்டில் பல வருடங்களாக வெள்ளை நிற நாட்டு நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அவர்களுடைய வளர்ப்பு நாய், ஜெயந்த் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் வீட்டை,  கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்துள்ளது.

 

இந்நிலையில், புதுக்கோட்டையில் பெய்த மழையால் ஜெயந்த் வீட்டை சுற்றி அதிகளவில், புல், செடி கொடிகள் முளைத்துள்ளது. அப்போது, அந்த அடர்ந்த புதர் பகுதிக்கு வந்த நல்ல பாம்பு ஒன்று, திடீரென ஜெயந்த் வீட்டிற்குள் செல்ல முயன்றுள்ளது. அந்த சமயத்தில், அதே பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றிக்கொண்டிருந்த வெள்ளை நாய் வீட்டை நோக்கி நல்லபாம்பு ஒன்று செல்வதை பார்த்துள்ளது. உடனடியாக அந்த நல்ல பாம்பை நாய் கடித்துக் கொன்றுள்ளது. அதன் பிறகு அதே பகுதியில் வாயில் நுரை தள்ளிய நிலையில், ஜெயந்தின் வளர்ப்பு நாயும் இறந்து கிடந்துள்ளது.

 

இத்தனை வருடங்கள் தனக்கு உணவளித்து செல்லமாக வளர்த்த வந்த எஜமான் குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்காக, தன் உயிரையும் துச்சமாக நினைத்து பாம்பைக் கடித்துக் கொன்ற நிலையில், பாம்பின் விஷம் தாக்கி தன் உயிரையும் இழந்துள்ளது.  இதைப் பார்த்து,  கண் கலங்கிய ஜெயந்த் குடும்பத்தினர்,  அவர்கள் வளர்த்த நாயைச் சோகத்துடன் தூக்கிச் சென்று நல்லடக்கம் செய்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.