Skip to main content

இடைத்தேர்தல் தேவையில்லை என தலைமை செயலாளரே சொல்லுவதா? விஜயகாந்த் கண்டனம்

Published on 07/10/2018 | Edited on 07/10/2018
vi


பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்திருப்பதை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்ந் வெளியிட்டுள்ள கண்டன  அறிக்கை:  ‘’சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பரபரப்பு தகவலை அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் உயர்பதவியில் இருப்பவர்களே ஊழல் புகார்களுக்கு ஆளாகும் நிலையை கண்கூடாக பார்க்கமுடிகிறது. ஏற்கனவே இந்தியாவில் ஊழலில் முதலிடம் தமிழ்நாடு என்ற நிலை இருக்கும் போது, தமிழக ஆளுநர் அவர்களே தன்னிலை விளக்கமாக துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறியிருப்பது “வேலியே பயிரை மேய்வதற்கு சமமாக மக்கள் கருதுகிறார்கள். அதற்கு பதிலளித்துள்ள நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள், தகுதி அடிப்படையில் தான் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ்  துணைவேந்தர்களை நியமித்தார்கள் என சொல்லியிருக்கிறார்கள். எந்த தகுதி அடிப்படையில் நியமனம் செய்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் செய்வது கல்வி தகுதியின் அடிப்படையிலா?, சீனியாரிட்டி அடிப்படையிலா? அல்லது யார் அதிகப் பணம் கொடுக்கிறார்கள் என்ற அடிப்படையிலா என அனைவரையும் சிந்திக்கவைத்துள்ளது.

 

    தமிழ்நாடு முழுவதும் இலஞ்சம் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளதை, ஊழல் ஒழிப்பு துறையைச் சேர்ந்தவர்களும், மத்திய அரசும், தமிழக ஆளுநரும் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். இலஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்போம் என சொல்லளவில் சொல்லாமல், இதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

 

    அதேபோல் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவேண்டியதை ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக, தலைமை செயலாளர் அவர்களே தற்போது தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் தேவையில்லை என தேர்தல் ஆணையத்தில் சொல்லியிருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது. ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் தற்போது இடைத்தேர்தல் நடந்தால் மக்கள் சரியான பாடம் புகட்டிவிடுவார்கள் என பயந்து அஞ்சுவது தெள்ளத் தெளிவாகத்தெரிகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதையும், பின் இடைத்தேர்தல் வேண்டாம் என்று கூறியிருப்பதையும் தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு, ஆளும் கட்சியின் அவலத்தை மத்திய அரசும், நீதிமன்றமும் உடனடியாக தலையிட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.