Skip to main content

பெண் காவலரின் துணிச்சலை பாராட்டி பரிசளித்த டாக்டர்கள்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Doctors who appreciated the bravery of the female policeman

 

செல்ஃபோன் பறித்துச் சென்ற ரவுடியை விரட்டிப் பிடித்த கர்ப்பிணி பெண் காவலரின் துணிச்சலையும், கடமை உணர்வையும் பாராட்டி 1 லட்சம் ரூபாய் பரிசளித்துப் பாராட்டியிருக்கிறார்கள் சூர்யா மருத்துவமனை டாக்டர்கள். அந்தப் பெண் காவலருக்கு உயரதிகாரிகளின் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது.

 

சென்னை பேசின் பாலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் சுசீலா. இவர்  கடந்த 24-ந் தேதி பேசின் பாலம் ரயில் நிலையத்திலிருந்து காவல் நிலையத்துக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். காவல் நிலையம் அருகே பேருந்து சென்றபோது பேருந்தில் இருந்த ஒருவர் தனது மொபைல் ஃபோன்  திருடப்பட்டு விட்டதாகக் கதறினார். இதைப் பார்த்த பெண் காவலர் சுசீலா, பேருந்தில் பயணம் செய்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். பேருந்தில் சந்தேகப்படும்படி இருந்த இரண்டு  நபர்களைப் பிடித்து விசாரித்தார். அப்போது, பெண் காவலர் சுசீலாவை தள்ளிவிட்டு ஒருவர் தப்பியோடினார்.

 

மற்றொருவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த பெண் காவலர் சுசீலா, பேசின் பாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், சுசீலா நடத்திய விசாரணையில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டது புளியந்தோப்பு திருவிக நகரைச் சோ்ந்த 36 வயதுடைய ஜாபா் ஷெரீப்  என்பது தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் இருப்பதும்  தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

 

கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட ரவுடியை  விரட்டிப் பிடித்த மூன்று மாத கர்ப்பிணியான சுசீலாவின் துணிச்சலை மக்கள் வியந்து பார்த்தனர். இந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்தும் தனது கடமையை மறக்காத பெண் காவலர் சுசீலாவின் தைரியத்தை பாராட்டி  1 லட்சம் ரூபாய் பரிசளித்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீகுமார். இந்தப் பரிசளிப்பு நிகழ்வில் காவல்துறையின் டெபுடி கமிஷனர், சூர்யா மருத்துவமனையின் டாக்டர்கள் அனந்தகுமார், ராஜீவ் ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பரிசளித்து பாராட்டிய டாக்டர் ஸ்ரீகுமார், "உங்களின் துணிச்சல் மற்றவர்களுக்கும் ஒரு ஊக்க சக்தி" என்று வாழ்த்தினார். இந்த நிலையில், சுசீலாவை  காவல்துறை உயர் அதிகாரிகளும் பாராட்டினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.