Skip to main content

பிறந்த குழந்தைக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்த மருத்துவர்கள்..! மெமோ அனுப்பிய மருத்துவக் கல்லூரி முதல்வர்..!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

Doctors give death certificate to newborn baby ..! Medical College Chief sends memo ..!

 

தேனி அரசு மருத்துவமனையில் இறந்ததாக கூறப்பட்டு உயிர் பிழைத்த குழந்தை, சிகிச்சை பலனின்றி நேற்று (05.07.2021) பரிதாபமாக இறந்தது.

 

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் பிலவேந்திர ராஜா. இவர், டிரைவர் வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி பாத்திமா மேரி. இவர்களுக்கு எட்டு மற்றும் ஐந்து வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பாத்திமா மேரி மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்தார். பிரசவ வலி ஏற்படவே அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாக கூறி மருத்துவமனை பணியாளர்கள் ஒரு வாளியில் பெண் சிசுவின் உடலை வைத்து பாத்திமா மேரியிடம் கொடுத்துள்ளனர். 

 

இதனால் மனவேதனை அடைந்த தம்பதியினர், தமது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து குழந்தையை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பெரியகுளம் தென்கரை உள்ள கல்லறையில் குழந்தையை அடக்கம் செய்ய கொண்டு வந்தனர். அப்போது வாளியைத் திறந்து பார்த்தபோது குழந்தை கண் விழித்து கைகளை அசைத்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

 

உடனடியாக குழந்தையை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். நேற்று காலை 11 மணிமுதல் குழந்தைக்கு வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தை திடீரென சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

 

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன், “பாத்திமா மேரிக்கு 6 மாதத்தில் குறைப் பிரசவம் நடந்துள்ளது. 700 கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உயிரோடு இருந்த குழந்தையை இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பவத்தன்று பணியில் இருந்த இரண்டு டாக்டர்கள் மற்றும் நான்கு செவிலியர்களுக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

 

இதுகுறித்து பிலவேந்திர ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் கூறும்போது, “பிறந்த குழந்தையின் நாடித்துடிப்பு இதயத்துடிப்பு முறையாக உள்ளதா என்பதைக் கூட பரிசோதனை செய்ய அரசு டாக்டர்களுக்குத் தெரியாதா? எங்களைப்போல வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று தெரியவில்லை. உயிரோடு பிறந்த குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியிலேயே இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அதற்கு சிகிச்சை அளித்து நேற்று மீண்டும் ஒரு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அரசு டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் மெத்தனப் போக்கைக் கண்டித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்கள். அப்படியிருந்தும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு உறவினர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.