doctor mgr university former vice chancellor chennai special court order

Advertisment

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில், கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2009- ஆம் ஆண்டு வரை, துணைவேந்தராகபணியாற்றியவர் மீர் முஸ்தபா உசைன். இவர், துணைவேந்தராகப் பணியில் இருந்த போது,25.05.2008 முதல் 30.05.2008 வரை வாஷிங்டனில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, பல்கலைக்கழகத்தின் சார்பில் விமானத்தில் சென்றுள்ளார். இதற்காக, உயர்வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு, விமான கட்டணமாக 2 லட்சத்து 99 ஆயிரத்து 673 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்பின்பு, இந்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டு சாதாரண இருக்கையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மீர் முஸ்தபா உசைன், சாதாரண இருக்கைக்கான டிக்கெட்டில் பயணம் செய்து விட்டு, உயர் வகுப்புக்கான டிக்கெட்டில் பயணம் செய்ததாகக் கூறி, மோசடியாக 2 லட்சத்து 22 ஆயிரத்து 332 ரூபாய் பணத்தை பல்கலைக்கழகத்தில் இருந்து கூடுதலாகப் பெற்றுள்ளார்.

Advertisment

இதேபோன்று, பிரிட்டிஷ், நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்று வந்த வகையில், டிக்கெட் கட்டணமாக 7 லட்சத்து 82 ஆயிரத்து 124 ரூபாயை, மோசடியாக பல்கலைக்கழகத்தில் இருந்து மீர் முஸ்தபா உசைன் பெற்றுள்ளார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி, மீர் முஸ்தபா உசைன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், மீர் முஸ்தபா உசைன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.