Skip to main content

வழிப்பறிக் கொள்ளையன் அட்டகாசம்!  மருத்துவருக்கு கத்திக்குத்து!

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Doctor injured robbery near vilupuram

 

 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள சரவணம்பாக்கம் ஊரைச் சேர்ந்தவர் ராஜன் என்பவரது மகன் ரோபின்(22). இவர், அதே ஊரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் மற்றொரு ஊழியரை நேற்று முன்தினம் இரவு அவரது ஊரான மேட்டுக்குப்பம் பகுதியில் விட்டுவிட்டு, மீண்டும் திருக்கோவிலூர் - மடப்பட்டு சாலை வழியாக மருத்துவமனைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். 

 

அப்போது மேட்டுக்குப்பம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி அருகே அவரது இரு சக்கர வாகனத்தை 25 வயது மதிக்கத்தக்க மர்ம வாலிபர் நிறுத்தியுள்ளார். அப்போது வாகனத்தை விட்டு கீழே இறங்கிய ரோபினிடம் அந்த இளைஞர், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். ரோபின் தன்னிடம் இருந்த நூறு ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். மேலும், தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், அந்த வழிப்பறி கொள்ளையன் செல்போனில் கூகுள் பே மூலம் தனக்கு பணம் அனுப்புமாறு மிரட்டியுள்ளார். 


தனது வங்கிக் கணக்கில் பணமில்லை, அதனால் கூகுள் பே மூலமும் பணம் அனுப்ப முடியாது என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வழிப்பறி கொள்ளையன், தான் வைத்திருந்த கத்தியால் ரோபினின் மொபைல் போனை குத்தி சிதைக்க முயன்றுள்ளார். இதில், சுதாரித்துக் கொண்ட ரோபின் அந்த வழிப்பறிக் கொள்ளையனிடம் பேசிக் கொண்டே மொபைல் போன் மூலம் மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையிலிருந்த மருத்துவர் காவிய வேந்தன் மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் உடனடியாக வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது ரோபின் கால் மற்றும் கை பகுதியில் கத்தியால் குத்தி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே கொள்ளையனைப் பிடிக்க முயன்றனர். அவர் மருத்துவர் காவிய வேந்தனையும் கத்தியால் தாக்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.


இதுகுறித்து உடனடியாக திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதோடு, வழிப்பறி கொள்ளையன் குறித்து வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.