மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்!

DOCTOR INCIDENT CHENNAI COURT JUDGEMENT

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ரூபாய் 10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான நிலத்தகராறில், கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை சம்பவம் பதிவாகியிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரித்த காவல்துறையினர், ஜேம்ஸ் சதீஷ்குமார், பொன்னுசாமி, மேரி புஷ்பம், போரிஸ், வில்லியம்ஸ், பேசில், ஏசு ராஜன், முருகன், ஐயப்பன், செல்வ பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனார். அதைத் தொடர்ந்து, அவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து உறவினர்கள் 4 பேர், கூலிப்படையினர் 5 பேர் என மொத்தம் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று (04/08/2021) தீர்ப்பு வழங்கியது.

எனினும் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் வெளியாகவில்லை. இன்று மதியம் அல்லது பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலிப்படையைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் அப்ரூவராக மாறியது வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்தது.

Chennai court judgment Doctor incident
இதையும் படியுங்கள்
Subscribe