Skip to main content

பள்ளி மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொல்லை..! போக்சோவில் நடவடிக்கை!     

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

Doctor arrested under pocso

 

கரூரில் பிரபல எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனை ஒன்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவருகிறது. இங்கு மருத்துவர் ரஜினிகாந்த் என்பவர் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவராக உள்ளார்.

 

இந்த மருத்துவமனையில் 40 வயதான பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக காசாளராகப் பணியாற்றிவந்தார். அந்தப் பெண் காசாளர் மருத்துவமனையில் கடன் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தீபாவளி போனஸ் மற்றும் மாத சம்பளம் போன்றவற்றை மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் காசாளர் பணியைவிட்டு நின்றுவிட்டிருக்கிறார்.  

 

அந்தப் பெண் காசாளரின் இரண்டாவது மகள் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவர் பள்ளி முடிந்ததும் மருத்துவமனைக்குச் சென்று தனது தாயுடன் வீட்டிற்கு வருவது வழக்கம். அப்படி அங்கு சென்றுவருவதில், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் மாணவிக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் (13.11.2021) மாலை மருத்துவமனை மேலாளர் சரவணன் என்பவர், மாணவியின் செல்ஃபோனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, ‘தீபாவளிக்கு அம்மாவிற்கு சம்பளம், போனஸ் தரவில்லை. அதனால், மருத்துவமனைக்கு நீ மட்டும் வந்து வாங்கிக்கொள்’ எனக்கூறி குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து அந்த மாணவி மருத்துவமனைக்குத் தனியாகச் சென்று அங்கு மருத்துவ ரஜினிகாந்த் அறைக்குச் சென்று அவரை சந்தித்தார். அப்போது மருத்துவர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவி அழுதுகொண்டே வீட்டுக்கு வந்து மருத்துவமனையில் நடந்தது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து மாணவியின் தாய், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் மருத்துவர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகியோர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தலைமறைவான இரண்டு பேரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்