தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் படி, அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேர் மருத்துவம் பயில்வதற்குத் தேர்வாகியுள்ளனர். இதற்கான ஒதுக்கீட்டு ஆணையை, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு வழங்கிய பிறகு, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்பொழுது பேசுகையில், மருத்துவப் படிப்பில் கடந்தாண்டு 6 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் சேர்ந்திருந்த நிலையில், இந்தாண்டு 313 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில உள்ளனர். சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது என்றார்.
மேலும், இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் நீட்டை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த நீட்டை கொண்டுவந்தது காங்கிரசும், திமுகவும்தான். அப்பொழுதெல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால் எங்களிடம் மட்டும் 'நீட்டு', 'நீட்டு' எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். நாங்களும் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் என்றார்.
அப்பொழுது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், 7.5 இடஒதுக்கீடு கொண்டுவந்துள்ளதாக பெருமை பேசுகிறீர்கள் எனக் கூறி கேள்வி ஒன்றைத் தொடர, ''பெருமை பேசுகிறோம் எனத் தவறாகப் பேசக்கூடாது. என்ன இப்படித் தவறா கேக்குறீங்க? 7.5 சதவீதம்னா என்னனு உங்களுக்குத் தெரியுமா? நீட் தேர்வு வருவதற்கு முன்பு மருத்துவப் படிப்பில் எவ்வளவு பேர் சேர்ந்தார்கள் எனக் கணக்குத் தெரியுமா சொல்லுங்க? பெருமை பேசுகிறேன்னு சொல்லாதீங்க நான் உண்மையிலேயே பெருமைகொள்கிறேன். நான் கிராமத்திலிருந்து வந்தவன் ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டுட்டு இருக்கோம்'' எனக் காட்டமாக முதல்வர் பதிலளித்தார்.