ADVERTISEMENT

பொங்கல் பரிசு டோக்கன்களில் அரசியல் தலைவர்களின் படங்களை அச்சிடக் கூடாது! – உயர் நீதிமன்றம் உத்தரவு!

11:13 AM Jan 06, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி குடும்ப அட்டைகளுக்குத் தலா 2,500 ரூபாய் மற்றும் பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான டோக்கன்கள் விநியோகம் கடந்த வாரம் தொடங்கியது.

ADVERTISEMENT

இந்த டோக்கன்களில் ஆளுங்கட்சியின் சின்னமும், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனவும், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், பொங்கல் பரிசுக்கான டோக்கன்களில் ஆளுங்கட்சியினரின் புகைப்படங்கள் அச்சிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. கடந்த வாரம் விடுமுறை கால அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ‘இரு மாவட்டங்களில் மட்டும் கட்சியினர் ஆர்வ மிகுதியால் அதுபோல அச்சிட்டுள்ளனர். பிற பகுதிகளில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் டோக்கன்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும். இது சம்பந்தமாக சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்படும்’ என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, தமிழக அரசும் சுற்றறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘கடந்த விசாரணையின்போது அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அரசு வழங்கும் டோக்கன்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டும்’ என தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுவிட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை’ என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும், அரசின் சுற்றறிக்கையையும் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், அரசு வழங்கும் டோக்கன்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT