Skip to main content

கல்வியை அரசியலாக்கக் கூடாது: அன்புமணி

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

கல்வியை அரசியலாக்கக் கூடாது உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்துள்ளார். 
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்தியாவின் உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான வரைவு மசோதாவை மத்திய மனிதவள அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு, இதுகுறித்த கருத்துக்களை வரும் 7-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.

 

 

 

பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பை ஏற்படுத்துவதென்பது மிகப்பெரிய நிர்வாக மாற்றம் ஆகும். அதுகுறித்து கருத்து தெரிவிக்க வெறும் 10 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டு இருப்பது போதுமானதல்ல. இம்மாதம் 18-தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதில் இதற்கான மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதற்காகத் தான் மத்திய அரசு இவ்வளவு வேகம் காட்டுகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதே மாற்றத்தை செய்ய முயற்சிகள் நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அம்முயற்சிகள் கைவிடப்பட்டன. ஆனால், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் உள்ளிட்ட எவரது கருத்துக்கும் மதிப்பளிக்காமல் இந்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பதிலாக உயர்கல்வி ஆணையத்தை அமைப்பது என்பது சீர்திருத்தமாக இருக்காது... சீரழிவாகவே இருக்கும்.
 

பல்கலைக்கழக மானியக்குழு அமைக்கப்பட்டதில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. 1949-ஆம் ஆண்டு சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டக் குழுவில், ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் தான் மூளையாக செயல்பட்டு பல்கலைக்கழக மானியக் குழு எத்தகைய தன்மை கொண்டதாக இருக்க  வேண்டும் என்பதை தீர்மானித்தார். உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது மட்டுமின்றி உயர்கல்வியிலும், உயர்கல்வி நிர்வாகத்திலும் சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும் என்பதும் பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். ஆனால், எந்த நோக்கங்களுக்காக பல்கலைக்கழக மானியக்குழு  உருவாக்கப்பட்டதோ, அவற்றின் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

 

 

 

மானியக்குழு அமைக்கப்பட்டு 62 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், உயர்கல்வி  இன்னும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் ஒன்றாக மாறவில்லை. அதுமட்டுமின்றி உயர்கல்வி நிர்வாகத்தில் சமூக நீதியை கொண்டு வர முடியவில்லை. தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதிலுள்ள பல்வேறு துறைகளின் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்களாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை. மற்ற மத்திய பல்கலைக்கழகங்களிலும் இதேநிலை காணப்படும் நிலையில், பல்கலைக்கழக மானியக்குழுவை கலைப்பது உயர்கல்வியில் சமூக நீதியை சிதைத்து விடும். உயர்கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே இந்த மாற்றம் வழி வகுக்கும்.

 

Do not politicize education: You have to abandon the decision of setting up a higher education commission


 

பல்கலைக்கழக மானியக் குழு கல்வியாளர்கள் அமைப்பாக செயல்பட்டு வந்த நிலையில், புதிய அமைப்பு அரசியல் அமைப்பாக மாற்றப்படும் ஆபத்து உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் இருப்பர். அவர்கள் அனைவரும் கல்வியாளர்கள். மேலும் மானியம் வழங்குதல் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும் மானியக்குழுவுக்கு இருக்கிறது. ஆனால், இந்திய உயர்கல்வி ஆணையத்துக்கு மானியம் வழங்கும் அதிகாரம் இல்லை. அதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பறித்துக் கொண்டது. அதேநேரத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை  எடுப்பதற்காக கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக உயர்கல்வி ஆணையத்தில் இடம்பெறும் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட  14 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே கல்வியாளர்களாக இருப்பார்கள்; மற்றவர்கள் அதிகாரிகளாக இருப்பர்.
 

இதனால், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக மானியக்குழுவால்  நியாயமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலை மாறி, மத்திய அரசுக்கு ஆதரவான பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழக பல்கலைக்கழகங்கள் புறக்கணிக்கப்படும் ஆபத்து உள்ளது. பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் அதிகாரமும் புதிய அமைப்பிடமிருந்து பறிக்கப்பட்டு, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தலைமையிலான 10 உறுப்பினர் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. அக்குழு பரிந்துரைப்படி எந்த ஒரு கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உயர்கல்வி ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது மிக, மிக ஆபத்தானதாகும்.
 

பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர்களை அரசே நினைத்தாலும் நீக்க முடியாது. அதனால் கல்வியாளர்கள் யாருக்கும் அஞ்சாமல் சீர்திருத்தங்களை செய்து வந்தனர். ஆனால், புதிய அமைப்பில்  உள்ள 14 பேரையும் மத்திய அரசு நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நீக்க முடியும். இதனால் புதிய அமைப்பு மத்திய ஆட்சியாளர்களின் கைப்பாவையாகவே செயல்படும். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் அல்லது இந்தியை திணிக்க மத்திய அரசு முயலும் போது, அதை ஏற்க மறுத்தாலோ, எதிர்ப்பு தெரிவித்தாலோ அதன் அங்கீகாரத்தை உயர்கல்வி ஆணையத்தால் நீக்க முடியும். இதனால் இந்தியாவிலுள்ள எந்த பல்கலைக்கழகமும் சுதந்திரமாக செயல்பட முடியாது; மத்திய அரசின் கொள்கை பரப்பும் அமைப்பாகவே செயல்பட முடியும். இவ்வாறு இருந்தால் உயர்கல்வியின் தரம் எந்த வகையிலும் உயராது; மாறாக தாழும்.

 

 

 

உயர்கல்வியை முழுமையான வணிகமயமாக்குதல்,  பெரு வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்  பல்கலைக்கழகங்களை ஒப்படைத்து கார்ப்பரேட் மயமாக்குதல், பன்னாட்டு நிறுவனங்களை மறைமுகமாக நுழைத்தல் ஆகிய தீமைகளையும் புதிய அமைப்பு அனுமதிக்கும். பல்கலைக்கழகங்கள் மீதான மாநில அரசுகளின் அதிகாரங்களையும் உயர்கல்வி ஆணையம் பறிக்கும். எனவே, சமூக நீதிக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான உயர்கல்வி ஆணையத்தை அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.