Skip to main content

கெய்ல் எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியே கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதிக்க கூடாது - ஈ.ஆர். ஈஸ்வரன்

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

கெய்ல் எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியே கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதிக்க கூடாது. விவசாயிகளின் கோரிக்கை ஏற்கபடாவிட்டால் கொங்கு மண்டலம் போராட்டக்களமாக மாறிவிடும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறியுள்ளார்.
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

விளைநிலங்கள் வழியாக கெய்ல் எரிவாயு குழாயை பதிக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதியை வழங்கி விடக்கூடாது. தமிழக அரசிடம் அனுமதி கிடைத்ததும் மூன்று ஆண்டுகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி முடிக்கப்படுமென்று கெய்ல் தென்மண்டல செயல் இயக்குனர் அறிவித்திருப்பது கொங்குமண்டல விவசாயிகளிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கெய்ல் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாயின் வழியாக எரிவாயுவை கொண்டு செல்ல திட்டமிட்டு தமிழகத்தில் எரிவாயு குழாயை விவசாய விளைநிலங்கள் வழியாக பதிக்க ஆரம்பிக்கப்பட்டபோது கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 கொங்கு மண்டல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த சில ஆண்டுகாலமாகவே விவசாய குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு போராடி கொண்டிருக்கும் சூழ்நிலையில், எரிவாயு குழாயை விளைநிலங்களின் வழியே கொண்டு சென்றால்  இந்த 7 மாவட்டங்களிலும் விவசாயம் அழிந்து போகும் நிலை உருவாகும். நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று வார்த்தைகளால் மட்டும் சொல்லி கொண்டிருந்தால் போதாது. இந்த திட்டம் விளைநிலங்கள் வழியே செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து மாற்று வழியான தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

Do not allow gas pipeline to go through the farms



 

ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் புதியபுதிய வளர்ச்சி திட்டங்கள் தேவை. ஆனால் அந்த வளர்ச்சி திட்டங்கள் விவசாயத்தை பாதிக்காதவாறு செயல்படுத்த வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தால் மட்டுமே எதிர்கால சந்ததிகள் இங்கு வாழ முடியும். எந்தவொரு திட்டத்தையும் ஆரம்பத்தில் செயல்படுத்தும் போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறி நம்பிக்கை தரும் மத்திய, மாநில அரசுகள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டங்களால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது அதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பு ஏற்காமல் அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மட்டும்தான் நாங்கள் என்றும், செயல்படுத்தியது அவர்கள் தான் என்றும் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஒன்றுக்கொன்று மாறிமாறி குற்றச்சாட்டி கொள்வதை ஸ்டெர்லைட், மீத்தேன் உள்ளிட்ட விவகாரத்தில் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் நாளை நமக்கும் இதேநிலை உருவாகும் என்பதால்தான் ஆரம்பத்திலே எதிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மீது தவறை வைத்துக்கொண்டு திட்டத்தை நிறைவேற்ற மக்கள் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்புடையதல்ல. எனவே தமிழக அரசு எரிவாயு குழாயை தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் பதிக்க மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். கொங்கு மண்டல விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாமல் மீண்டும் விளைநிலங்கள் வழியே கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாயை பதிக்க முற்படுமானால் விவசாயிகளின் நலனுக்காக கொங்கு மண்டலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.