Skip to main content

காஷ்மீர் விவகாரத்தில் திமுக நிலைப்பாடு துரதிர்ஷ்டவசமானது! ஹெச்.ராஜா கண்டனம்!!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை திமுக எதிர்ப்பது துரதிர்ஷடவசமானது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தர்மபுரியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து சேலம் வழியாக செவ்வாய்க்கிழமை (செப். 24) சென்றார். இதற்கிடையே, சேலம் பெரியார் பல்கலையில் உள்ள தனது நண்பர் ஒருவரை காண்பதற்காக பல்கலைக்கு சென்றார். சிறிது நேரம் பல்கலை வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், பின்னர் தர்மபுரிக்குக் கிளம்பிச் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களின் வினாக்களுக்கு பதில் அளித்ததாவது:

 

h raja


தமிழக பாஜக தலைவர் யார்? என்று முடிவு செய்ய வேண்டியது, கட்சியின் அகில இந்திய தலைமையின் பொறுப்பு. கட்சித் தலைமை யாரை தலைவராக அறிவித்தாலும் அனைத்து பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நான் மாநிலத் தலைவராக நியமிக்கப்படலாம் என்பது குறித்து கேட்கிறீர்கள். 1978ம் ஆண்டில் காரைக்குடியில் 4வது வார்டு தலைவராக என்னுடைய அரசியல் பணியைத் தொடங்கினேன். இப்போது அகில இந்திய செயலாளர் வரைக்கும் வந்திருக்கிறேன். கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவேன்.


நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும். இரண்டிலும் வெற்றி பெறுவோம்.


'ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டம்' என்கிற தலைப்பில் அரங்கக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறோம். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த 370 ஏ, 35 ஏ சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதற்கு, இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் போராட்டங்கள் கிடையாது. ஏனெனில், அங்கெல்லாம் கொஞ்சம் தேச பக்தி அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் 370 ஏ, 35 ஏ ஷரத்துகள் என்ன சொல்கிறது என்று தெரியாமலேயே, 'இந்தியாவே காஷ்மீரை விட்டு வெளியேறு' என்று கோஷம் போடுகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது. 

திமுகவாக இருக்கட்டும் அல்லது அதனுடைய இலவச இணைப்புகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள் சமூகநீதியைப் பற்றி பேசுகின்றன. இதுநாள் வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வரை, பட்டியல் சமூக மக்களுக்கு, மலைவாழ் மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. அரசியல் சட்டப்பிரிவு 370 ஏ, 35 ஏ ரத்து செய்யப்பட்ட பிறகுதான் அங்குள்ள பட்டியல் சாதியினருக்கும், மலைவாழ் மக்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. 

அதேபோல, காஷ்மீரில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 2 சதவீதம மட்டும் இட ஒதுக்கீடு இருந்தது. இப்போது மற்ற மாநிலங்கள் போல 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அதை எதிர்க்கிற திமுக சமூக விரோத தீய சக்தியா இல்லையா? அதை எதிர்க்கிற வைகோ, திருமாவளவன் ஆகியோர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் எதிரிகள்தானே? இந்த உண்மைகள் எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக கூட்டங்கள் நடத்தி வருகிறோம். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.