DMK Women's Rights Conference; Leaders praise the artist

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

அந்த வகையில், திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்குத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்து வருகிறார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பீகார் அமைச்சர் லெஷி சிங் பேசுகையில், “பெண்களின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர். 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பேசினார். திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் பேசுகையில், “தமிழ்நாட்டில் மிக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். சமூக நீதி, சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கலைஞர். நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு முன்னணியில் உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை பெயரளவுக்கு மட்டுமே மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.” எனத்தெரிவித்தார்.