Skip to main content

என்.எல்.சி நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

dmk volunteers struggle against NLC , tamilians ignored action

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாகவுள்ள 259 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு, கடந்த 13.3.2020 அன்று நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்நிறுவனம் நேர்முகத் தேர்வுக்கு தேர்வானவர்கள் 1,582 பேர் என 30.01.2021 அன்று நிறுவன இணையத்தில் பட்டியல் வெளியிட்டது. இந்த 1,582 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.

 

என்.எல்.சி நிறுவனத்தின் இந்தத் தமிழர் விரோத போக்கிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும், பொதுநல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நெய்வேலி பெரியார் சிலை அருகில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வெ.கணேசன் எம்.எல்.ஏ, நெய்வேலி சபா.இராசேந்திரன் எம்.எல்.ஏ, புவனகிரி சரவணன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், "என்.எல்.சி இந்தியா நிறுவனம் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் என்.எல்.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தங்கள் வீடு, நிலங்களைக் கொடுத்து என்.எல்.சி நிறுவனம் நவரத்னா அந்தஸ்து பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர். என்.எல்.சி நிறுவனத்தில் தொடர்ந்து கடந்த ஜந்து ஆண்டுகளாக வடமாநில இளைஞர்களைப் பணியில் அமர்த்தி வருகின்றனர்.

 

dmk volunteers struggle against NLC , tamilians ignored action

 

இந்நிலையில் தற்போது நடைபெற்ற பொறியாளர்கள் நேர்முகத் தேர்வில் 1,582 பேர் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. என்.எல்.சி நிறுவனம் கேட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். அதில் தமிழக இளைஞர்களுக்கு 50% சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசின் அடிமையாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். என்.எல்.சி இந்தியா நிறுவனத்தினால் வெளியேற்றப்படும் புகையால் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், என்.எல்.சி ஊழியர்களுக்கும் சிறுநீர் மற்றும் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் என்.எல்.சி நிறுவனம். என்.எல்.சி நிறுவனத்தில் பயிற்சி முடித்த அப்ரண்டிஸ் தொழிலாளர்கள், என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்கள், பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

 

மேலும் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் நெய்வேலியில் உள்ள தொழிலாளர்கள் அல்லாதவருக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது நடைபெற்ற பொறியாளர் தேர்வை என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்யாவிட்டால், அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும்" என்றார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் இள.புகழேந்தி, ஐயப்பன், தொ.மு.ச பேரவை இணைப்பொதுச் செயலாளர் சுகுமார், துணை செயலாளர் வீர.ராமச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன் மற்றும் அணி நிர்வாகிகள், என்.எல்.சி அப்ரண்டிஸ் தொழிலாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.