Skip to main content

'25 இலட்சம் முடிச்சாச்சுன்னு  தலைவர்  கிட்ட சொன்னேன் பத்தாதுன்னு சொல்லிட்டாரு'-  உதயநிதி கலகல பேச்சு...!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணிச் சார்பில் இளைஞரணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கரூர் சி.எஸ்.ஐ. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

 

dmk uthayantihi speech


இதில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி பேசும் போது.. இந்திய அரசியல் இயக்கங்களில் அதிக இளைஞர்களை இலட்சோப லட்ச வீரர்களை கொண்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான்.  கடந்த ஆண்டு இதே மாதம் மூன்றாம் தேதி இதே சிஎஸ்ஐ விளையாட்டு மைதானத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளைத் துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றார்கள். அந்த மேடைகளில் பேசி கழக இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பேசுகின்ற பொழுது அடுத்த ஆண்டு இங்கே  நடைபெறுகின்ற நிகழ்ச்சியின் பொழுது இளைஞரணிச் செயலாளராக வர வேண்டும் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார்கள் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது. கடந்த வாரம் ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்தியது.

 

dmk


இங்கே இருக்கும் தம்பிமார்கள் வருகின்ற சட்டமன்றதேர்தல் தான் அடுத்து வருகின்ற தேர்தல் இந்த தேர்தலின் போது ஒவ்வொரு இளைஞனும் தங்களுடைய பங்களிப்பை கழகத்திற்கு நீங்கள் வழங்க வேண்டும். நம்மால் நிச்சயம் ஒவ்வொருத்தரும் பத்து வாக்குகளை கழகத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு நம்மால் பெற்றுத்தர முடியும் வந்திருக்கக்கூடிய தம்பிமார்கள் ஒவ்வொருவரும் தன்னால் பத்து வாக்குகளை  நான் உதயசூரியன் சின்னத்திற்கு பெற்றுத்தர பாடுபடுவேன் என்ற உறுதியை இந்த இளைஞர் அணிக் கூட்டத்திலே அன்பிற்குரிய இளைஞரணிச் செயலாளர் முன்னிலையில் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேசும் போது,

 


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன், கருணாநிதியின் பேரன் என்பதை விட எனக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் பதவி பெரியதல்ல. எப்போதும் தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டரில் ஒருவராக இருந்தே நான் செயலாற்ற விரும்புகிறேன்.

என்னைப் பிரித்து பார்க்காமல் இளைஞரணியினர்தான் ஒருங்கிணைந்து எனக்கு வழிகாட்ட வேண்டும். 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞரணியில் சேர்க்க இலக்கு நிர்ணயித்திருந்தோம். அதில் 25 லட்சம் சேர்ந்து விட்டதை, தலைவர் ஸ்டாலினிடம் கூறினேன். அப்போது அவர் பாராட்டு தெரிவிக்கவில்லை. மாறாக 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுகோள் விடுத்தார்.

செந்தில்பாலாஜி என்னை அண்ணன் என்றார். என்னை விட 3 வயது மூத்தவர் அவர். அவரை இளைஞர் அணியில் சேர்த்துக்கொள்கிறோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள், ஆனால் ஓரே கல்லில் பல மாங்காய் அடிப்பவர் செந்தில்பாலாஜி. கடந்த முறையே என்னை ஒரு நாள் முழுக்க வச்சு  செஞ்சுட்டார். இப்பவும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ண சொன்னேன். ஆனா தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திட்டார். எல்லோரையும் உறவு முறை வைத்து அழைக்கிறார். ஒரு மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் அவர் தான்.

அதனை நோக்கி நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 42 ஆயிரம் பேர் இளைஞரணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும். இளைஞரணி என்பது அரசியலுக்கானது மட்டும் அல்ல. மாறாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது, குளம் தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாப்பது, மரக்கன்று நடுவது போன்ற சமூக மேம்பாட்டு பணிகளிலும் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான முதல் கட்ட போராட்டத்தை இளைஞரணி முன்னெடுத்து சென்றது. தற்போது டெல்லியில் அமைதியாக போராடியவர்கள் மத்தியில் வன்முறை வெடித்து 50 பேர் இறந்து உள்ளனர். இதற்கு பிரதமர் மோடி ஒரு சின்ன வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.


 

dmk

 

பிரதமர் என்கிற அடிப்படையில் இந்தியாவையே மோடி கட்டுக்குள் வைத்திருந்தாலும், தமிழக மக்களின் ஆதரவு எப்பவுமே எங்க டாடிக்கு தான். இதே எழுச்சியுடன் இளைஞரணியினர் வருகிற 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானதும் மக்களின் தேவையை உணர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

இரவு பகலாக படித்து அரசு வேலைக்குச் சென்றால் வாழ்வு கிடைக்கும் என பலர் தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் தற்போது டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு முறைகேடு அம்பலமாகியுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றுள்ளது. கரூரில் நடந்த அட்டூழியத்தால் வெற்றி பறிபோயிருக்கிறது. இதற்காக துவண்டு விட வேண்டாம். சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

முன்னதாக கரூர் வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு மண்மங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அங்கு மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் கரூர்-கோவை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அரங்கில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அங்குள்ள ஒரு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் கரூரில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடந்த குதிரை வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசு வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.