
பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாமக இரண்டு அணியாக பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாமகவிற்கு புதிய பொதுச்செயலாளரை ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். பாமக மாணவரணி செயலாளராக இருந்த முரளி சங்கர் பாமகவின் மாநில பொதுச் செயலாளராக ராமதாஸ் அறிவிக்கப்பட்டதோடு, வடிவேல் ராவணனை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க திருவள்ளூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது. திருவள்ளூரில் தனியார் மண்டபத்தில் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் ராமதாஸால் நீக்கப்பட்ட பாமக பொருளாளர் திலகபாமா, வழக்கறிஞர் பாலு, பொதுச் செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் உள்ளிட்ட பலர் அன்புமணியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தின் மேடையில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''பாமகவை தொடங்கி கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாகிறது. 36 ஆண்டுகளாக கடுமையான பயணம் இருந்து வருகிறது. கட்சியை சமூகநீதி போராளி ராமதாஸ் தொடங்கி நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். ராமதாஸின் சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அந்தப் பாதையில் நம்முடைய பயணம் நீண்ட கடுமையான, கரடு முரடான பாதைகள் கொண்ட பயணம். நாம் கட்சி தொடங்கிய நோக்கமே நமக்கும் ஆட்சி அதிகாரம் வரவேண்டும்; நமக்கும் ஆட்சி அதிகாரம் வந்தால் தான் தமிழ்நாட்டுக்கு பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பதுதான்.
ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பாக வன்னியர் சங்கத்தை தொடங்கினார். வன்னியர் சங்கத்தை வைத்து எத்தனையோ போராட்டங்களை நடத்தினார். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலை மறியல், ரயில் மறியல், பஸ் மறியல், பட்ட நாமம், தூக்கு கயிறு என்றெல்லாம் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அப்போது இருந்த ஆட்சியாளர்களை சந்தித்து எங்களுக்கு சமூகநீதி கொடுங்கள் என்றார். வன்னியர்களுக்கு மட்டுமல்ல பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், அடக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பாதாளத்தில் இருக்கின்ற மக்களுக்கும் சமூக நீதி வேண்டும் என்று ராமதாஸ் வன்னியர் சங்கத்தை தொடங்கினார்.

ஆனால் இது பத்தாது என்று தான் கட்சியை தொடங்கினார். தமிழ்நாட்டில் இன்று எத்தனையோ கட்சிகள் அமைப்புகள் இருக்கிறது.சமூக நீதி அடிப்படையில் ஒரு சிலர் சமூக நீதிக்கு ஆதரவாக இருப்பார்கள். ஒரு சிலர் சமூக நீதிக்கு எதிராக இருப்பார்கள். ஆனால் மூன்றாவது வகை ஒன்று இருக்கிறது. எந்த வகை தெரியுமா? அதுதான் திமுகவின் வகை. சமூக நீதி சமத்துவம்; ஜனநாயகம்; சாதி ஒழிப்பு என்றெல்லாம் பேசுவார்கள். முற்போக்கு சிந்தனைகள் எல்லாம் பேசுவார்கள். தந்தை பெரியார் வாரிசு என்று பேசுவார்கள். ஆனால் நடைமுறைப்படுத்துவார்களா என்றால் அதை செய்ய மாட்டார்கள். இவர்கள் என்னைப் பொறுத்தவரை சமூக நீதிக்கு துரோகிகள்.
திமுக ஆட்சியை சமூக நீதியின் துரோகியாகப் பார்க்கிறேன். சமூக நீதி என்ற சொல்லை கூறத் தகுதியற்றவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினும் திமுகவினரும். உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது, ஆட்சி இருக்கிறது, தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு 40 மக்களவை உறுப்பினர்களை தமிழ்நாடு கொடுத்திருக்கிறது. மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு அதிகாரம், இவ்வளவு ஆட்சியும் வைத்துக் கொண்டு உங்களால் தமிழ்நாட்டில் ஒரு துரும்பு அளவுகூட சமூக நீதிக்காக பங்களிப்பு இல்லையென்றால் எதற்கு உங்களுக்கு ஆட்சி. எதற்கு உங்களுக்கு அதிகாரம். எதற்கு பெரியாரின் வாரிசு, அண்ணாவின் வாரிசு, கலைஞரின் வாரிசு என்ற வீண் பேச்சு. என்ன வசனம் பேசி யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
நூறு வருடம் மகிழ்ச்சியோடு ராமதாஸ் வாழ வேண்டும். ராமதாஸுக்கு என் மேல் கோபம் இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒரு பெரியதல்ல. அதே வேளையில் ராமதாஸ் நூறாண்டுகளுக்கு மேல் நல்ல மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அது ஒரு மகனுடைய கடமையும் கூட. பத்தாண்டுகளுக்கு முன்பு ராமதாஸிற்கு பைபாஸ் நடந்தது. சுகர், பிபி எல்லாம் இருக்கிறது. அதனால் தான் சொல்ல வேண்டும் டென்ஷன் ஆகாதீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஒரு கட்சியின் தலைவராக நான் செய்கிறேன். இது நீங்கள் உருவாக்கிய கட்சி. உங்களுடைய கனவுகளை நினைவாக்குவோம். 45 ஆண்டுகள் உங்களுடைய உழைப்பு இதில் இருக்கிறது. சாதாரண உழைப்பு கிடையாது. நீங்கள் இன்று தேசிய தலைவர்'' என்றார்.