Skip to main content

''கரோனா நேரத்தில் மக்களோடு மக்களாக நின்றது திமுக'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

 "DMK stood with people as people during Corona"- Chief Minister M.K. Stalin's campaign

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணிக்கு முடிவடையவுள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கான முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

இந்நிலையில் ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''பெரியார் பிறந்த இந்த மண்ணில் உங்களை எல்லாம் சந்தித்து வருகின்ற 27 ஆம் தேதி நாளை மறுநாள் நடைபெற இருக்கக்கூடிய ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்முடைய வேட்பாளராக, திமுகவின் ஆதரவு பெற்ற வேட்பாளராக, தோழமைக் கட்சிகளின் துணையோடு நிற்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளராக வாக்கு கேட்டு நிற்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தை ஆதரித்து மிகச் சிறப்பான வெற்றியை தேடி தர வேண்டும் என்று கேட்பதற்காக நான் உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன்.

 

பெரியார் பிறந்த இந்த மண்ணில், அறிஞர் அண்ணா வாழ்ந்த இந்த மண்ணில், கலைஞர் குருகுலமாக போற்றி கொண்டாடிய இந்த மண்ணில் உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தல் விதிமுறைப்படி மூடப்பட்டு இருக்கிறது நமது கலைஞரின் திரு உருவச்சிலை. இந்த சிலையை நான் தான் திறந்து வைத்தேன். கலைஞர் மறைவுக்கு பிறகு முதன்முதலாக அண்ணா அறிவாலயத்தில் தான் கலைஞருடைய உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எந்த மாவட்டத்தில் முதலில் தொடங்கிட வேண்டும் என்று முடிவெடுத்தபோது அவர் குருகுலமாக கருதிய ஈரோட்டில் தான் திறந்திட வேண்டும் என்று முடிவு செய்து அந்த பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டு அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் இந்த மாவட்டத்தின் செயலாளராக இருக்கக்கூடிய வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய முத்துசாமி. கலைஞர் சிலையின் அருகில் நின்று கொண்டு உங்களை சந்திப்பது, உங்களிடம் ஆதரவு கேட்பது, கை சின்னத்திற்கு வெற்றியை தேடி தாருங்கள் என கேட்பது மிக மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது. இது இடைத்தேர்தல் அல்ல திராவிட மாடல் ஆட்சியை எடைபோடும் தேர்தல். 

 

அதிமுக நிறுத்தியிருக்கும் வேட்பாளர் ஏற்கனவே இங்கு எம்எல்ஏவாக இருந்தவர். அவர் இந்த தொகுதிக்கு, இந்த பகுதிக்கு நல்ல காரியங்கள் ஏதேனும் செய்திருக்கிறாரா? என்று கேட்டால் கிடையாது. ஒரே ஒரு உதாரணத்தை உங்களிடம் குறிப்பிட விரும்புகிறேன். கரோனா என்ற ஒரு கொடிய காலம் வந்தது. ஏறக்குறைய இரண்டு வருடம் பல கொடுமைகளை நாம் அனுபவித்தோம். அந்த கரோனா வந்த நேரத்தில் இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் நன்மைகளை உதவிகளை செய்து இருக்கிறாரா என்றால் கிடையாது. ஆனால் திமுக சார்பில் இன்று மாவட்டத்தின் செயலாளரான முத்துசாமி தலைமையில் திமுகவினர் மக்களோடு மக்களாக நின்று துணையாக இருந்தார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.