Skip to main content

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் வாக்குறுதிகளை! நிறைவேற்றி கொடுப்போம்  ஸ்டாலின்  பேச்சு!!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

 

மாற்று கட்சிகளில் இருந்து திமுகவில் இணையும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்  தேனி மாவட்ட திமுக சார்பில் தேனி அருகே  உள்ள  வீரபாண்டியில் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.  

 

பொதுக்கூட்டத்திற்கு மாற்று கட்சியிலிரூந்து திமுகவில் இணைவதற்காக மாவட்ட அளவில் ஆயிரக்கணக்கானோர் வந்து திமுக வில் இணைந்தனர்.   அந்தஅளவிற்கு மாற்றுகட்சியில் இருந்து திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் அதற்கான ஏற்பாடுகளை செய்து மாற்றுக் கட்சியினரையும் பொதுமக்களையும் கட்சியில் இணைத்தார்.     அதோடு மாவட்ட அளவில் கட்சிக்காரர்களும் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.

 

s


இக்கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  இதில் கழக துணை துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கலந்து கொண்டனர். அதன் பின் இறுதியாக பேசிய கழக தலைவர் ஸ்டாலினோ... அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வில் தங்கதமிழ்செல்வன் கடந்த மாதம் இணைந்தார்.   அவரோடு சேர்ந்து இன்றைக்கு ஆயிரக்கணக்கில் இங்கே அமைந்துள்ள இந்த அண்ணா அறிவாலயத்தில் நீங்கள் எல்லாம் வந்து சேர்ந்து இருக்கிறீர்கள்.  வரவேண்டிய இடத்துக்கு, வந்து சேர வேண்டிய இடத்துக்கு தான் வந்திருக்கிறீர்கள். தங்கதமிழ்செல்வன் பேசும் போது  கூட நம்முடைய மொழிக்கு, இனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை சுட்டிக் காட்டினார். நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது.

 

s

 

தலைவர் கலைஞர் 14 வயதில் பள்ளிக்கூடத்தில் மாணவனாக படித்துக் கொண்டு இருந்த  அன்றைக்கு திணிக்கப்பட இருந்த இந்தியை எதிர்க்க தமிழ்மொழியை காக்க தன்னோடு படித்துக் கொண்டு இருந்த பள்ளி மாணவர்களை திரட்டி திருவாரூர் நகர வீதிகளில் தமிழ்க் கொடியை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று  தமிழ் மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது.   அதை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு நாம் வந்து இருக்கிறோம்.   தமிழ் மொழியை பற்றி கலைஞர் குறிப்பிட்டுச் சொல்லும் போது, தமிழை தமிழே என்று அழைக்கும் சுகம் வேறு எதிலும் கிடையாது என்பார்.   அப்படிப்பட்ட தாய் மொழியாம் தமிழுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது.   


தங்கதமிழ்செல்வனுடன் சில நேரம் யாருக்கும் தெரியாமல் பழகுகிற வாய்ப்புகளை நாங்கள் பெற்றது உண்டு.    அவரிடம் பிடித்த விசயம் என்னவென்றால் அவர் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார்.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.   அதுபோன்று அவருடைய சிரிப்பு கள்ளம்கபடம் இல்லாதது. சட்டமன்றத்தில் சில நேரம் நான் பேசிவிட்டு வெளியே வரும் போது, என்னிடம் வந்து அண்ணே சூப்பரா பேசினீர்கள் என்று தனிப்பட்ட முறையில் சொல்வார்.

 

தங்க.தமிழ்செல்வனை ரொம்ப நாளாகவே எப்படியாவது தூண்டில் போட்டு இழுத்து விடலாம் என்ற முயற்சியில் நாங்கள் ஈடுபட்டது உண்டு. அவர் மாட்டவில்லை. ஆனால், இப்போது மாட்டிவிட்டார். கொஞ்சம் தாமதம் அவ்வளவு தான். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து இருக்கிறார்.

 

s

 

நீங்கள் எல்லாம் அண்ணா உருவாக்கிய இயக்கத்துக்கு வந்து இருக்கிறீர்கள்.  கலைஞர் வழிநடத்திய இயக்கத்துக்கு வந்து இருக்கிறீர்கள்.   நீங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டு இருந்த மறைந்த எம்.ஜி.ஆர். இருந்த இயக்கமும் தி.மு.க. தான். அறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை வழிநடத்த தமிழகத்தின் முதல்வராக  பொறுப்பேற்க சில பிரச்சினைகள் வந்தது. அப்போது முதல் ஆளாக அண்ணாவுக்கு பிறகு கலைஞர் தான் முதல்அமைச்சராக வர வேண்டும் என்று சொல்லி அதை செய்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.. பல கட்டுரைகளில் கலைஞரை பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிடும் போது, நான் அண்ணாவாக கலைஞரை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தான் புரட்சி நடிகராக வலம் வருவதற்கு அந்த பட்டத்தை கொடுத்ததே கலைஞர் தான் என்று எம்.ஜி.ஆர். பல நேரங்களில் சொல்லி இருக்கிறார். பிறக்கும் போதே கலைஞர் தி.மு.க. என்று கூறியதோடு, 'தி' என்பது திருவாரூர், 'மு' என்பது முத்துவேலர் 'க' என்பது கருணாநிதி என்ற விளக்கத்தை கூறியவர் எம்.ஜி.ஆர்.


தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார். முதல்அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., ஒரு நாளும் ஒரு சின்ன இழிசொல்லை கூட கலைஞரை பார்த்து சொன்னது கிடையாது. அந்த அளவுக்கு கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பாச உணர்வு உண்டு. 


இன்றைக்கு இருக்கும் அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வா. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வாக இருந்திருந்தால் தங்கதமிழ்செல்வன் தி.மு.க.வுக்கு வந்து இருக்கவே முடியாது.  எம்.ஜி.ஆருக்கும், இன்றைக்கு இருக்கும் அ.தி.மு.க.வுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் அரசின் செலவில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொண்டாடினார்கள். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்திக் கொண்டு இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக அவர்களுக்கே அந்த விழாவை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர எம்.ஜி.ஆர். புகழை பாடினார்களா? அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். உருவாக்கியது மட்டும் இல்லை, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டது.

 

நமக்கும், ஜெயலலிதாவுக்கும் கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எம்.ஜி.ஆர். மறைந்தபோது முதன்முதலில் அஞ்சலி செலுத்தியது கலைஞர் தான். அதேபோல், ஜெயலலிதா மறைந்தபோது மருத்துவமனையில் உடல் நலிவுற்ற நிலையில் படுத்தபடுக்கையாக இருந்த கலைஞர் என்னை அழைத்து உடனடியாக சென்று அஞ்சலி செலுத்துவிட்டு வா என்று உத்தரவிட்டார். இது நம்முடைய அரசியல் நாகரிகம். ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி அவருடைய படத்தை சட்டைப் பையில் வைத்து இருக்கிறார்கள். உள்ளன்போடு வைத்து இருக்கிறார்களா? கொள்ளை அடிப்பதற்காகவும், பதவி சுகத்தை அனுபவிக்கவும், லஞ்சம் பெறவும், ஊழல் செய்யவும் இன்றைக்கு அந்த படத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

 

ஜெயலலிதா மறைவு என்பது மர்மமான கேள்விக்குறியோடு இருந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் எத்தனையோ முதல் அமைச்சராக இருந்தவர்கள் மறைந்தபோது இப்படி ஒரு பிரச்சினை வந்தது உண்டா? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நாங்களா முதலில் சொன்னோம். இன்றைக்கு துணை முதல்அமைச்சராக இருக்கும் ஒபிஎஸ் தானே இதை முதலில் சொன்னார். அதை ஏன் சொன்னார் தெரியுமா? ஜெயலலிதா மறைந்தவுடன் முதல்அமைச்சராக ஓ.பி.எஸ் இருந்தார். அப்போது அவர் மர்மம் என்று சொல்லவில்லை.  அவருடைய பதவியை எடுத்தவுடன் அவருக்கு ஆத்திரம் வந்து விட்டது. ஆத்திரம் வந்ததால் நேராக ஜெயலலிதா சமாதிக்கு சென்றாரா? இல்லையா? 40 நிமிடங்கள் உட்கார்ந்து தியானம் செய்தாரா? இல்லையா? தர்மயுத்தம் என்று சொன்னாரா? இல்லையா? ஆவியோடு பேசினாரா? இல்லையா? நான் விமர்சனம் செய்கிறேன் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. அவரே வந்து வெளியே சொன்னார். அம்மாவுடன் பேசினேன் என்றார். மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றார்.

 

விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றார் பின்னர்  அவரை சமாதானம் செய்வதற்காக தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் நடந்து கொண்டு இருக்கிறது, அந்த ஆணையத்தை நீடித்துக் கொண்டே செல்கிறார்கள். முடிவே இல்லாமல் போய்கொண்டு இருக்கிறதே. அந்த விசாரணை ஆணையத்தில் இருந்து ஓ.பி எஸ் சை விசாரிக்க வேண்டும் என்று 6 முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். அதை ஏற்றுக் கொண்டு இதுவரை ஒருமுறை கூட ஆஜராகாதவர் தான் ஓ.பி.எஸ் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

எம்.ஜி.ஆரைப் பற்றி கவலைப் படாதவர்கள், ஜெயலலிதாவை பற்றி கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்காதவர்கள், இன்றைக்கு மோடியையும், அமித்ஷாவையும் தான் தலைவர்கள் என்று அவர்களின் படத்தை வைத்து பூஜை செய்து கொண்டு இருப்பவர்களின் தலைமையில் அன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அமித்ஷாவுக்கோ, மோடிக்கோ அண்ணாவை தெரியுமா? எம்.ஜி.ஆரை தெரியுமா? வெறும் பதவிக்காக, பணத்துக்காக தலையாட்டி பொம்மையாக, அடிமைகளாக இருந்து கொண்டு இருக்கும் நிலையில் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. உண்மையாக அ.தி.மு.க.வில் இன்றைக்கும் உழைத்துக் கொண்டு இருக்கும் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் அங்கே இருப்பது நியாயமல்ல. உங்களின் இயக்கம், தாய்க் கழகமான தி.மு.க. தான். நான் இந்த கூட்டத்தின் மூலமாக அவர்களையும் அழைக்க விரும்புகிறேன்.

 

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். தேனி தொகுதியில் நாம் வெற்றி பெறும் வாய்ப்பை எப்படி இழந்தோம் என்பதை தங்கதமிழ்செல்வன் கூறிவிட்டார். அதுபோல், 22 சட்டமன்ற தொகுதிகளில் நாம் 13 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். சட்டமன்றத்தில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என்ன பேசுகிறார்கள் என்றால், இந்த தேர்தலில் தி.மு.க. மக்களிடம் பொய்யான வாக்குறுதி தந்து, தவறான வாக்குறுதி தந்து, அதையும் தாண்டி மக்களை மிட்டாய் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். 38 தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றோம் என்றால், நீங்கள் இந்த தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள் அதற்கு  நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா?
மக்கள் என்ன இழிச்சவாயர்களா? தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் முதல் அமைச்சர் பேசலாமா? 

 

தி.மு.க. முறையாக தேர்தலை சந்தித்து 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று கம்பீரமாக ஆட்சி அமைக்கும். இன்றைக்கு இருக்கும் ஆட்சி இன்னைக்கா? நாளைக்கா? என ஐ.சி.யு.வில் உள்ளது. ஐ.சி.யு. என்பதை விட, கோமா நிலையில் உள்ளது இப்போதுள்ள ஆட்சி. நாங்கள் கொடுத்தது மிட்டாய் அல்ல. தமிழக மக்களுக்கு நாங்கள் கொடுத்து இருப்பது வாக்குறுதி. இன்று இல்லை என்றாலும் நாளை தி.மு.க. தானே ஆட்சிக்கு வரப் போகிறது. தேர்தல் நேரத்தில் தந்துள்ள அத்தனை உறுதிமொழிகளையும், மீண்டும் தேர்தல் நேரத்தில் தரப்போகும் அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம்.

 

அ.தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தார்களே.. என்றைக்காவது ஒருநாள் நாடாளுமன்றத்தில் மத்திய ஆட்சியில் கோரிக்கை வைத்து ஏதேனும் தீர்மானம் போட்டது உண்டா? ஏதாவது பேசியது உண்டா? எதுவும் கிடையாது. நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 5 மாணவிகள் தற்கொலை செய்து இறந்து உள்ளனர். நடுத்தர, ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள் என்னதான் படித்து சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தாலும், நீட் தேர்வால் மருத்துவக்கல்வி படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

 

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தான் மத்தியில் நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். அதை நான் மறுக்கவில்லை. அப்போது குஜராத் முதல்அமைச்சராக இருந்த மோடி அதை ஏற்கவில்லை. தமிழகத்தில் கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது அதை ஏற்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று தடை உத்தரவு பெற்றார். கலைஞர் முதல்அமைச்சராக இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழையாமல் பார்த்துக் கொண்டார். ஜெயலலிதா முதல்அமைச்சராக இருந்தவரை கூட வரவில்லை.  அவரை சர்வாதிகாரி என்ற நிலையில் நான் அவரை விமர்சித்து இருந்தாலும், மத்திய அரசை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தவர் அவர். நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வை தடுப்போம் என்று கூறி இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு தடுக்கவில்லையோ.

 

தி.மு.க. கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற 38 எம்.பி.க்கள் டெல்லியில் சென்று என்ன செய்யப் போகிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். நாம் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக நம்முடைய வீரர்கள் பொறுப்பேற்று இந்த ஒரு மாதத்தில் என்னென்ன சாதனைகள் செய்து இருக்கிறார்கள் என்பதை இன்றைக்கு நான் தலைப்புச் செய்தியாக குறிப்பிட விரும்புகிறேன்.

 

பள்ளிக் கல்வியில் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற முயற்சி எடுத்த நேரத்தில் அதை திரும்ப பெற வைத்தது நம்முடைய எம்.பி.க்கள் தான். ரெயில்வே துறையில் தமிழிலும் பேசக்கூடாது, ஆங்கிலத்திலும் பேசக்கூடாது. இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை அனுப்பிய உடனே, அனுப்பிய ஒரு மணி நேரத்தில் அதை திரும்பப் பெற வைத்தோம் என்றால் அது தி.மு.க. எம்.பி.க்களால் தான். அதுபோல், தபால் துறையில் தேர்வு எழுதுவதற்கு இந்தி. தமிழ் கிடையாது. அதை எதிர்த்து குரல் கொடுத்தார்கள். அதன் பலனாக, நடத்திய தேர்வை ரத்து செய்து இனி தமிழிலும் தேர்வு எழுதலாம் என்ற உத்திரவாதத்தை பெற்று இருக்கும் கட்சி தான் தி.மு.க.. அதுபோல் ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், நியூட்ரினோ திட்டமாக இருந்தாலும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். நியூட்ரினோ திட்டம் என்பது துணை முதல்-அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில் தான் உள்ளது. தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், துணிச்சல் இருந்தால் அதை எதிர்த்து சட்டமன்றத்தில் வாதிடுவதற்கு இந்த ஆட்சியாளர்கள் தயாராக இருக்கிறார்களா?
ஒருபுறம் காவிரி பிரச்சினை, சேலம் உருக்காலை பிரச்சினை, நெக்ஸ்ட் தேர்வு பிரச்சினை, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை இப்படி பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலையில், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். சட்டமன்றத்தில் தினமும் குரல் கொடுத்துள்ளோம்.

 

ஆட்சியை கலைக்க கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள் என்று நம்மை பார்த்து விமர்சனம் செய்கிறார்கள். இனிமேல் கனவு எல்லாம் காண வேண்டிய அவசியம்  இல்லை.  நினைவாகவே விரைவில் நடக்கப் போகிறது என்று கூறினார் 

 

  இக் கூட்டத்தில் ஸ்டாலினுக்கு தங்கதமிழ்செல்வன் வெள்ளிவால் வழங்கினார். அதோடு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்.  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்  மற்றும் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர் மூக்கையா முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார். பெரியகுளம் முன்னாள் நகர செயலாளர் செல்லப்பாண்டியன் தேனி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி. போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன்.தேனி ஜீவா மற்றும் கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்!

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

“முதல்வர் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவுள்ளார்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் உலக முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் திண்டுக்கல் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்தியாவில் தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தொழில் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, தொழிலாளர் தேவை, சாலை வசதி, சட்ட ஒழுங்கு, மின்சார வசதி எனப் பல்வேறு உதவிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார். அதுபோல் தமிழ்நாடு முதலமைச்சர்  துபாய், அபுதாபி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்கிட முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8  ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

அதுபோல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 13 இலட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி, தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. 

 

தமிழகத்தில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான நீடித்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் வாயிலாக குறு, சிறு தொழில் முதலீடு ரூ.60,000 கோடி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, அனுமதிகள், மானியங்கள், கடனுதவிகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப படித்த இளைஞர்களுக்கு புதிய தொழில் பயிற்சிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தாட்கோ மூலமாக தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. புதிய தொழில்கள் தொடங்கப்படும் மாவட்டங்களில், அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில், 143 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு மானியமாக ரூ.14.23 கோடியும், மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தில் 318 உற்பத்தி, சேவை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு மானியமாக ரூ.7.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 23 நிறுவனங்கள் சார்பில் ரூ.331.33 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

5 பயனாளிகளுக்கு ரூ.59.81 இலட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, இதில் ரூ.19.45 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்கிட தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். இந்த வாய்ப்புகளை தொழில் முனைவோர்கள், தொழில் முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.