'DMK rule for the seventh time is our goal' - DMK leader M.K.Stal's speech

Advertisment

சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மற்றும் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பாராளுமன்றத்தில் உரையாற்றியது ஆகியவை பேசு பொருளாகி இருக்கும் நிலையில் பல்வேறு தீர்மானங்களை திமுக நிறைவேற்றியுள்ளது.

அதன்படி நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை தரம் தாழ்ந்து பேசிய அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. மேலும் அமித்ஷாவை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நடத்திய திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெஞ்சல் புயல் பாதிப்பு நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தல் வைக்கப்பட்டுள்ளது. பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல என்பதை மனதில் நிலை நிறுத்த வேண்டும். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. டங்ஸ்டன் கனிம ஏல சுரங்க சட்டத்தை ஆதரித்த அதிமுக, பாஜகவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாத்தனூர் அணையை படிப்படியாக திறந்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. படிப்படியாக சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் மக்கள் உயிர் பாதுகாக்கப்பட்டதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர்; போராட்ட பரணி பாடுவீர் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisment

செயற்குழுவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''2026ல் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். முதலமைச்சர் தலைமையில் நடந்த எந்த தேர்தலிலும் திமுக தோற்கவில்லை. திமுகவிற்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் நம்மை வலுப்படுத்த வேண்டும். திமுகவின் ஒவ்வொரு அணியும் வெற்றிக்கு பாடுபடும். 200க்கு மேல் வெற்றி பெறுவோம்'' என்றார். தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், '2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும். ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் நமது இலக்கு'' என பேசியுள்ளார்.