Skip to main content

''கொல்லிமலை: அரிசி இலவசமாக போட்டுவிட்டு வீணாய்ப்போன பொருள்களை 250 ரூபாய்க்கு தலையில கட்டறாங்க!'' ஊராட்சி சபை கூட்டங்களில் பெண்கள் புகார்!!

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
ko


கொல்லிமலையில் நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டத்தில், ரேஷன் கடைகளில் அரிசியை இலவசமாக போட்டுவிட்டு, மக்களுக்கு காலாவதியான பொருள்களை 250 ரூபாய்க்கு தலையில் கட்டிவிடுவதாக பெண்கள் புகார் கூறினர்.

 


மக்களவை தேர்தலையொட்டி, ஒவ்வொரு குக்கிராமம்தோறும் ஊராட்சி சபைக்கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. இதற்கு பரவலாக ஆதரவும் கிடைத்து வருகிறது. நாமக்கல் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் மாவட்ட செயலாளர் காந்திசெல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 


இந்தக்குழுவினர், திமுகவே இதுவரை பயணிக்காத சின்னச்சின்ன கிராமங்களிலும்கூட தொடர்ந்து பயணித்து வருகின்றனர். கொல்லிமலையில் மொத்தம் 14 நாடுகள் உள்ளன. கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் அங்குள்ள வாழவந்திநாடு, குண்டூர்நாடு, திண்ணூர்நாடு உள்ளிட்ட நான்கு நாடுகளில் ஊராட்சி சபைக்கூட்டங்களை நடத்தினர். குண்டூர்நாடு கிராமத்திற்குச் செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், சுமார் 2 கி.மீ. தூரம் திமுகவினர் பாதசாரியாகவே  சென்றுள்ளனர்.

 

k


சமவெளிப்பகுதியைக் காட்டிலும் மலைவாழ் பழங்குடகளிடையே ஊராட்சி சபைக்கூட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு ஊரிலும் சராசரியாக 200க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றதை தேர்தல் பொறுப்பாளர்களேகூட எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள், நாமக்கல் மாவட்ட திமுகவினர். குறிப்பாக, பழங்குடியின பெண்கள் பலர் ஆர்வத்துடன் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

 


குண்டூர்நாடு கிராமத்தில் நடந்த கூட்டத்தில், 'எடப்பாடி பழனிசாமியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கூட்டத்தினரைப் பார்த்து எஸ்.ஆர்.பார்த்திபன் கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் இருந்து எழுந்து பேசிய ஒரு பெண், 'பழனிசாமி ரொம்ப கெட்டவருங்க... கொள்ளை அடிக்கிறாருங்க' என்றார் தடாலடியாக. உடனே பார்த்திபன், 'எந்த பழனிசாமினு ஊர் பேரோட சேர்த்து சொல்லுங்கம்மா... இல்லேனா எங்களோட வந்த பழனிசாமிய சொல்றதா தப்பா நினைச்சுக்கப் போறாங்க' என்று ஜனரஞ்சகமாக பேசியதை, பலரும் ரசித்துக் கேட்டனர்.

 


தொடர்ந்து பேசிய அந்தப்பெண்மணி, 'அம்மாவை சசிகலா, எடப்பாடி பழனிசாமி எல்லாரும் சேர்ந்துதாங்க கொன்னுப்புட்டாங்க,' என்றார். மலைவாழ் மக்கள் வரை இதுபோன்ற தகவல்கள் சென்று சேர்ந்திருப்பதை திமுகவினரும் ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டனர்.

 

k

 

மற்றொரு பெண்மணி பேசுகையில், ''எங்க ஊர்ல ரேஷன் கடையில இலவசமா அரிசி போடுறாங்கய்யா. ஆனா காலாவதியான சோப்பு, எண்ணெய், மளிகை சாமான்கள்னு 250 ரூபாய்க்கு எங்க தலையில கட்டிடறாங்கய்யா. இங்க எல்லாருமே வறுமைக்கோட்டுக்குக் கீழதான் வாழறோம். ஒருபக்கம் இலவச அரிசி கொடுத்துட்டு, இன்னொரு பக்கம் பணத்தை பிடுங்கிக்கிறாங்கய்யா....'' என்றார். 


வேறு ஒரு இடத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், திமுக பொறுப்பாளர்கள், 'ஆதரிப்போம் ஆதரிப்போம் அண்ணன் தளபதியை ஆதரிப்போம்' என்றும், 'வாக்களிப்போம் வாக்களிப்போம் அண்ணன் தளபதிக்கு வாக்களிப்போம்' என்றும், 'தூக்கி எறிவோம் தூக்கி எறிவோம் எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிவோம்' என்று முழ க்கமிட்டு, மக்களையும் முழக்கமிடச் செய்யும் நூதன உத்தியைக் கையாண்டனர்.


பொங்கலூர் பழனிசாமி பெரும்பாலும், ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பணமதிப்பிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை குறித்து பேசினார். எஸ்.ஆர்.பார்த்திபன், தமிழக அரசின் செயல்பாடுகளையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் விமர்சித்துப் பேசினார். ஒவ்வொரு ஊராட்சி சபைக்கூட்டத்திலும் அ ந்தப்பகுதியில் பிரபலமான நபர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை அணிவித்தும் கவுரவிக்கின்றனர்.


சமவெளி பகுதிகளைக் காட்டிலும், கொல்லிமலை பழங்குடி மக்களிடையே ஊராட்சி சபைக்கூட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.