Skip to main content

“திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” - ‘அதிமுக’ தங்கமணி ஆவேசம்!

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
DMK regime should also be put to an end says Thangamani

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், துறையூர் நகரக் கழக செயலாளர் அமைதி பாலு ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் திருச்சி, துறையூர், பாலக்கரை பகுதியில், மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கட்சி நிறுவனத் தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர், எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில், அமைப்பு செயலாளர்  நாமக்கல் மாவட்ட செயலாளர்,  முன்னாள் அமைச்சர் தங்கமணி, திரைப்பட இயக்குநர் பவித்ரன், தஞ்சை மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி,   எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த 11 ஆண்டு காலம் தமிழகத்தின் பொற்காலம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோர் கொண்டு வந்த  தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய மடிக்கணினி போன்ற  மக்களுக்கு பயன்படும் முத்தான திட்டங்களை திமுக அரசு தற்போது நிறுத்திவிட்டது.   மேலும்,  நம் எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளியில் பயின்றதால், அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பு படிப்பதற்காக 7.5% இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தார்.   இதனால் ஆண்டு தோறும் ஏழை மாணவ, மாணவிகள் சுமார் 500 நபர்கள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.

திமுக, வருகின்ற, நாடாளுமன்றத் தேர்தலை  மனதில் வைத்துக் கொண்டு தான், கடந்த 27 மாதங்களுக்குப் பிறகு குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.   தேர்தல் வாக்குறுதியின் போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படும் என கூறிவிட்டு, தற்போது 2 கோடியே 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில், அதில் ஒரு கோடியே 10 லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு  ரூபாய்  ஆயிரம்  30 சதவீத குடும்ப அட்டைகளுக்கு வழங்கவில்லை.

திமுக வீர வசனமாக தேர்தல் அறிக்கை கொடுத்துவிட்டு இன்று ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலத்திற்கு உள்ளாகவே மின் கட்டணத்தை 52% உயர்த்தி விட்டனர். வீட்டு வரி 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் ஏற்றிவிட்டனர். கடைகளுக்கு 150 சதவீதம் வரை வரி விகிதம் உயர்ந்து உள்ளது. குடிநீர் முதல் குப்பை வரி வரை உயர்ந்து இருக்கிறது.   இதனால் மக்கள் அன்றாடம் கஷ்டப்படுகின்றனர். இந்த திமுக ஆட்சிக்கு வாக்களித்துவிட்டு தினந்தோறும் ஒவ்வொரு விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. திமுக ஆயிரம் ரூபாய் உங்களுக்கு கொடுப்பதாகச் சொன்னால் உங்களுக்கு கூடுதலாக 500 ரூபாய் செலவாகிறது என்று அர்த்தம். இதெல்லாம் சிந்தித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்  ஒருபுறம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் வேலை வாய்ப்பு கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு மூன்று லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று கூறிவிட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் மொத்தமே மூன்று லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை எப்படி எல்லாம் திமுக பொய் பேசி தங்களது ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள் என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.   இந்த ஆட்சியில் கலைஞர் போலவே அவரது மகனும் பொய்யான வாக்குறுதி கொடுப்பதிலே மிகவும் கெட்டிக்காரராக இருக்கிறார். அதில் ஏமாந்து தான் இந்த முறை மக்கள் வாக்களித்து விட்டு மீண்டும் எப்போது தேர்தல் வரும் அதிமுக ஆட்சி எப்போது அமையும் எடப்பாடி எப்போது முதலமைச்சராக வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாவலர் என்று மார்தட்டி சொல்லிக்கொண்டு இருக்கும் திமுக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர் வீட்டில் வேலை செய்த ஒரு பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பெண் அவரை நயவஞ்சகமாக அழைத்து வந்து மருத்துவராக படிக்க வைப்போம் என்று கூறி அந்த பெண்ணை அவரது மகன் மற்றும் மருமகள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.   அந்தப் பெண்ணிற்காக எடப்பாடி போராட்டம் அறிவித்த பிறகு இப்பொழுது தான் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் காலை ஐந்து மணிக்கு வாசலில் கோலம் போடச் சென்றால் கழுத்தில் அணிந்திருக்கும் செயினை பறிக்கும் கூட்டம் இருக்கிறது. அந்த அளவுக்கு சட்டம் சந்தி சிரிக்கிறது.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்ச ரூபாய், பட்டாசு ஆலைகள் வெடி விபத்தில் இறந்தால் மூன்று லட்ச ரூபாய் என்ற வினோதமான திட்டத்தை இந்தியாவில் எங்கேயுமே இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இருக்கிறது.   இப்படி பொய்யான ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி மலர வேண்டும். ஏனென்றால் 23 நாட்கள் காவேரி குழுவிற்காக நாடாளுமன்றத்தை முடக்கி தமிழகத்தில் உரிமையை பெற்று தந்தவர் எடப்பாடி” எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, அண்ணாவி, பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி முருகன், செல்வராஜ், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், புறநகர் வடக்கு மாவட்ட கழக மாணவரணி செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

“கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது” - இ.பி.எஸ்.!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
“Should not charge for summer training camp” - EPS

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நடத்தும் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டம் தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும். இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடைபந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பிற்கு, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்துவோம், தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கு பெறுவதை ஊக்குவிப்போம் என்றும், அதற்காக மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் கூறும் திமுக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டியில் ஆர்வமுள்ள, துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் இந்த அரசின் அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.