சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் கோடை தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வியாசர்பாடி 59வது வட்ட திமுக செயல் வீரர் சவுந்தரராஜன் என்பவர் தண்ணீர் கேன் போட்டுவந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு தண்ணீர் கேன்களை சவுந்தரராஜன் கொண்டுவந்திருக்கிறார். அப்போது திடீரென ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதனைக் கண்ட பொது மக்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். பின் சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த எஸ்பிளனேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் பகல் பொழுதில் நடந்துள்ள இந்தக் கொலை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.