Skip to main content

"தி.மு.க. ஆட்சி வந்ததும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை"...- உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு...

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

dmk party udhayanidhi stalin election campaign at cuddalore district

"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். மூன்றாவது நாளான நேற்று (23/12/2020) கடலூர் மேற்கு மாவட்டத்தில் நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சார பயணம் மேற்கொண்டார்.

 

நெய்வேலி தொ.மு.ச அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மூத்த நிர்வாகிகள் 10 பேருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அப்போது என்.எல்.சி. இரண்டாம் அனல் மின் நிலையத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த 21 தொழிலாளர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து தொழிலாளர்களுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

dmk party udhayanidhi stalin election campaign at cuddalore district

பின்னர் விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய உதயநிதி, "கடந்த மாதம் கலைஞர் பிறந்த திருக்குவளையில் ஆரம்பித்த என் பிரச்சாரப் பயணம் 13 நாட்களாக தொடர்கிறது. இதில் நான் சந்திக்கும் மக்களைப் பார்க்கும்போது தி.மு.க.விற்குதான் எங்களது ஓட்டு என கூறி வருகின்றனர். இதனால் அடுத்த ஆட்சி நமது ஆட்சி தான். என்னை கைது செய்து பயமுறுத்தலாம் என இந்த அரசு நினைக்கிறது. நான் கலைஞரின் பேரன் யாருக்கும் பயப்பட மாட்டேன். இந்த அடிமை ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். ஒன்பதரை வருடம் ஆகிறது. ஏதாவது ஒரு சாதனையை சொல்ல முடியுமா? ஊழல், விலைவாசி ஏற்றம் இதுதான் இவர்களது சாதனையாக உள்ளது. பத்தாயிரம் கோடி ஊழலை ஆதாரத்துடன் தலைவர் கவர்னரிடம் கொடுத்துள்ளார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்படுவார்கள். அதனால் ஆட்சி மாற்றத்துக்கு இளைஞர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

 

வருகிற ஜனவரி 27- ஆம் தேதி சசிகலா வெளியே வருகிறார். ஜெயலலிதா இறந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. அவர் எப்படி இறந்தார் என யாருக்காவது தெரியுமா? ஒரு சாதாரண மனிதன் இறந்தால் கூட அவரது உறவினர்கள் அவர் எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? என விசாரித்து தெரிந்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முதல்வர் எப்படி இறந்தார் என யாருக்காவது தெரியுமா? அடுத்து தி.மு.க. ஆட்சி வந்ததும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை செய்து அதற்குரியவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் நம்மால்தான் தீர்வு காண முடியும்.

dmk party udhayanidhi stalin election campaign at cuddalore district

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வித் திட்டமான குலக்கல்வித் திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கிறது. இதனால் தமிழக மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலைகளில் 100 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும்.

 

வேளாண் திட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட அ.தி.மு.க. அரசு, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எந்த வித ஆதரவும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. தமிழக முதல்வர் பச்சை துண்டு போட்டு கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறார். நீட் தேர்வை தி.மு.க. எதிர்த்து வந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வை கொண்டு வந்து வருடத்திற்கு நான்கு பேர் என இதுவரை 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒன்று இல்லை என்றிருந்தால் அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 100% நீட் தேர்வு ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு 7000 கோடி கடன் தள்ளுபடி செய்தது, இலவச மின்சாரம் வழங்கியது, ரேஷன் அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கியது, இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது என பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க ஆட்சியில் தான். தலைவர் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வென்றெடுப்போம் என கூறுகிறார். அது அவரது தாராளத்தை கூறுகிறது. நான் சொல்கிறேன் 234 தொகுதிகளில் 234 தொகுதியையும் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் கலைஞர்தான் வேட்பாளர் என நினைத்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும்" என்றார்.

dmk party udhayanidhi stalin election campaign at cuddalore district

பிரச்சார பயணத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் முந்திரி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க.வின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.