தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல் திமுக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசும்போது, " திமுக அரசு மக்கள் நலனை மனதில் கொண்டு இந்த ஆட்சியை நடத்தவில்லை. கொள்ளை அடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அரசு நடத்தி வருகிறார்கள். எப்படியாவது பித்தலாட்டம் செய்து வெற்றி பெற்று விடலாம் என்று அவர்கள் மனக்கணக்கு போட்டு வருகிறார்கள். திமுக கட்சியல்ல, கம்பெனி. அவர்களால் மக்களுக்கு எப்போதும் நல்லாட்சி கொடுக்க முடியாது. நாங்கள் 10 ஆண்டுகள் நல்லாட்சி கொடுத்த காரணத்தால் தான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளோம். ஆனால் அவர்களால் உங்களிடம் வாக்கு கேட்க வர முடியாத காரணத்தால் தான் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ஸ்டாலின் வாக்கு கேட்கிறார்" என்றார்.