Skip to main content

என்.எல்.சி சுரங்கநீரை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குறிஞ்சிப்பாடிக்கு வழங்க எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

MRK

 

என்.எல்.சி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளுக்கும், நிறுவனத்தைச் சுற்றியுள்ள ஒன்றியப் பகுதிகளுக்கும் வழங்க வேண்டும் என கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மற்றும் வடலூர் பேரூராட்சி பகுதிகளுக்கு அருகில் உள்ள என்.எல்.சி நிறுவன சுரங்கத்தின் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படுவதாலும், சுரங்க விரிவாக்கத்திற்கு வெடி வைப்பதினாலும் மேற்கண்ட பேரூராட்சி பகுதிகளில் அடிக்கடி ஆழ்குழாய்க் கிணறுகள், (Borewell) பழுதடைந்து, நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு, குடிநீரின்றி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அதிக செலவு ஏற்படுகிறது. மேலும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள நிறுவனம் ஆகும். இதன்மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படுவதால், அதனைச் சுற்றியுள்ள குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம், புவனகிரி, விருத்தாசலம், பண்ருட்டி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் வடலூர், குறிஞ்சிப்பாடி, கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் நீர் ஆதாரம் குறைகின்றது.

 

வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகள் தற்போது விரிவடைந்த பகுதிகளாக உள்ளதால், இங்கு அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற என்.எல்.சி மற்றும் அரசு ஊழியர்கள், விவசாயிகள் அதிகளவில் குடியேறி, அதிகளவில் வசித்து வருகின்றனர்.  

இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிக்கு அருகாமையிலே என்.எல்.சி சுரங்கத்திற்கு வெடி வைப்பதால் ஆழ்குழாய்க் கிணறு மற்றும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்க வேண்டுமென்று ஏற்கனவே சட்டமன்றத்திலும், தமிழக அரசுக்கும், என்.எல்.சி நிறுவனத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளேன். ஆகவே உடனடியாக பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் ஆதாரத்திற்கு நிரந்தர தீர்வாக என்.எல்.சி மூலம் வெளியேற்றப்படுகின்ற தண்ணீரை சுத்தப்படுத்தி மேற்கண்ட பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்க தமிழக அரசும், என்.எல்.சி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.