ADVERTISEMENT

'பொருளாதாரத்தை சீர்படுத்தக்கூடிய எந்த அறிவிப்பும் வரவில்லை' - கனிமொழி எம்.பி. காட்டம்!!!

04:37 PM Jun 08, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி கரோனா கால பேரிடர் நிவாரணமாக தொகுதியின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் நலிந்த மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருள்களைக் கொடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக கோவில்பட்டி நகரின் பல பகுதிகளிலிருக்கும் ஏழை எளிய மக்களின் நலம் பொருட்டு நிவாரண தொகுப்புகளை அவர் வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "விவசாயிகள் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்த்து வரும் எட்டு வழிச் சாலை திட்டத்தை தமிழக அரசு சொந்த ஆதாயத்திற்காக கொண்டு வருவதில் தீவிரம் காட்டுகிறது. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், கரோனா பொது முடக்கத்தால் போராட முன்வராத காலகட்டத்தை தனக்குச் சாதகமாகக் கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்றுவது என்பது மிக மோசமான முன்னெடுப்பு. அரசு இதனை நிறுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் விவசாயிகள், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றனர்.

தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வந்து போராடுவர். மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும், பொருளாதாரத்தை சீர் படுத்தக்கூடிய எந்த அறிவிப்பும் வரவில்லை. தொழிற்சாலைகள் விவசாயிகள், சிறு குறு தொழில் நடத்துபவர்கள் என்று யாருக்கும் மகிழ்ச்சியையும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய எந்த விதமான திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்பதுதான் வெளிப்படை. தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வராமலிருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.


தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை அளிப்பதற்கான கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதை பல தனியார் மருத்துவமனைகள் மீறிச் செயல்பட்டு வருகின்றன. கரோனா சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றன. அரசு ஒரு அறிவிப்பை செய்துவிட்டு நிறுத்திவிடுவதோடு கடமை முடியவில்லை. அந்த அறிவிப்பு பின்பற்றப்படுகிறதா? என்பதைக் கவனிக்க வேண்டியது அரசின் கடமை. சூழ்நிலை காரணமாகத்தான், மக்கள், தனியார் மருத்துவமனையைப் பயன்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார். நிவாரணம் மற்றும் பேட்டியின்போது தி.மு.க.வின் வடக்கு மா.செ.வான கீதா ஜீவன் மற்றும் நகர பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT