செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் தி.மு.க. சார்பில் இன்று (10/04/2022) மாலை 07.00 மணிக்கு நடைபெற்ற நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "உடன்பிறப்பு எனும் பாசப்பிணைப்புடன் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் தி.மு.க. அண்ணா, கலைஞர் ஆகியோர் பொதுமக்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர். எதிர்க்கட்சியாக இருந்த போதே நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. நான் முதலமைச்சராவதற்கு அடித்தளம் அமைத்த ஊர் மதுராந்தகம். நாம் மக்களோடு இருப்பதால் மக்கள் நம்முடன் இருக்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை தலைநிமிர வைத்துள்ளோம். தமிழகத்தில் கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தி.மு.க. அரசின் சாதனைகளை கட்சியினர் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்தை முதல் மாநிலமாக்க அனைவரும் உழைக்க வேண்டும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டத் திட்டங்கள் நிறைவேறும் போது, தமிழகம் நாட்டில் தலைசிறந்த மாநிலமாக மாறும்.
அ.தி.மு.க. ஆட்சியில் வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தகுதிக்கேற்ப வேலை, இல்லம் தேடி மருத்துவ வசதி, சமூக நீதி ஆட்சி போன்றவையே திராவிடமாடல் ஆட்சி. இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா என அனைவரும் கேள்விக் கேட்கத் தொடங்கிவிட்டனர். தமிழகத்தின் சமூக நீதியைப் பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கிவிட்டன." இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.