இளம்பெண்ணைத் துன்புறுத்திய புகார்; திமுக எம்எல்ஏ மகன், மருமகள் கைது

DMK MLA's son, daughter-in-law arrested

பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வீட்டிற்கு வேலைக்கு வந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக எழுந்த புகாரில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்த இளம்பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக புரோக்கர் ஒருவரின் மூலம் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் ஆண்டோ மெர்லின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண், 'தன்னை வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு கேட்டேன். ஆனால் எனது செல்போனை பறித்து வைத்துக் கொண்ட அவர்கள் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தனர். மேலும் மிரட்டல் விட்டதோடு அவருக்கு பல்வேறு வகைகளில் காயங்களையும் ஏற்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் ஏதுமில்லை' என பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்து இருந்தார்.

DMK MLA's son, daughter-in-law arrested

இளம் பெண்ணின் பேட்டிகள் மற்றும் ஏற்பட்ட காயங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இளம் பெண்ணைத்துன்புறுத்திய புகாரில் திமுக எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரையும் சென்னை அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

incident MLA Pallavaram police
இதையும் படியுங்கள்
Subscribe