DMK MLA Maharajan's speech about free bus has created controversy

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. அதில் முதன்மையானது மகளிர் விடியல் பயணத்திட்டம். அதன்மூலம் பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள், விளிம்பு நிலையில் இருக்கும் பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் என தினந்தோறும் லட்சக்கணக்கான மகளிர் பயணித்து பலன் பெற்று வருகின்றனர். இந்த திட்டம் இந்திய அளவில் பெரும் கவனத்தை பெற்றது.

அதே சமயம் இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் அவ்வப்போது பேருந்து நடத்துநர்கள், பயணிகள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்ட ஆண் சமூகத்தினர் சிலரால் அவமதிக்கப்படுகின்றனர். இதற்கு அவ்வப்போது வெளியாகும் காணொளிகளே சாட்சி. மகளிர் திட்டத்தினை கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பொன்முடியே பெண்கள் ஓசி பேருந்தில் செல்வதாக பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களும் எதிர்ப்புகள் எழுந்தன. அதன்பிறகு முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் பொது இடத்தில் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வரே அறிவுறுத்தியிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் மீண்டும் திமுக எம்.எல்.ஏ. ஒருவர்மகளிர் விடியல் பயணப்பேருந்து குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், தொகுதி மக்களிடையே பேசியபோது, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்ன சொன்னோம், பெண்களே 4 மணி வரைக்கும் வேலை செய்யுங்க. 4 மணிக்கு மேல நீங்க ஓசியா பஸ்ல போங்க. தேனி போங்க.. இல்ல ஆண்டிப்பட்டி போங்க... ஆண்கள் எல்லாம் வீட்டில் சோறாக்குங்க என்று சொல்லிவிட்டு போனேன். இப்போ அதே மாதிரி எல்லா இடத்திற்கும் போய் வர்றீங்கல்ல. இப்போ இந்த ரோடு போடப்போகிறோம். அதுல பஸ்ஸும் விடப்போகிறோம். அதுலையும் நீங்க ஓசிலதான போகப்போறீங்க...” என்று பேசியிருக்கிறார். இது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.