Skip to main content

பொதுமக்களுடன் இணைந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

DMK MLA involved in a sudden scuffle with the public

 

திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. குடியிருப்பு பகுதி, முருகன் கோவில், தனியார் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் இந்த டாஸ்மாக் கடை இருப்பதால் பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமத்தை சந்தித்துவந்தனர். இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சுமார் 10 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் அந்தப் பகுதியில் ஆய்வுக்காகச் சென்றபோது அங்குள்ள பெண்கள் இது தொடர்பாக முறையிட்டனர். அவரும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

 

ஆனால் நேற்று (07.10.2021) வழக்கம் போல் அந்த டாஸ்மாக் கடையில் லாரியில் வந்த மதுபான பெட்டிகளைக் கடைக்குள் அடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உடனே அங்கு மக்கள் திரண்டதால் உடனே அந்த இடத்திற்கு எம்.எல்.ஏ செல்வரஜும் நேரடியாக வந்தார். அவர் மதுபான பெட்டிகளை இறக்குவதை நிறுத்தச் சொன்னதால் அந்த லாரியும் மதுபான பெட்டிகளை இறக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் கேட்டபோது, கடையை மாற்ற தங்களுக்கு உத்தரவு இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு முன்பு நாற்காலி போட்டு அமர்ந்து பொதுமக்களுடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து, கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து எம்.எல்.ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த எம்.எல்.ஏ, கடையை முழுவதுமாக காலி செய்த பின்னரே தான் அந்த இடத்திலிருந்து செல்லப்போவதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார். அதன்பின்னர் பாரையும் காலி செய்ய கூறியதன் பேரில் உடனடியாக அனைத்து சாமான்களையும் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். மேலும், கலால் உதவி ஆணையாளர் சுகுமார், வடக்கு தாசில்தார் ஜெகநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்பும் எம்.எல்.ஏ அங்கிருந்து புறப்பட மறுத்ததால் மதியம் ஒன்றரை மணியளவில் டாஸ்மாக் கோவை மண்டல மேலாளர் கோவிந்தராஜுலு அங்கு வந்து எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், லாரியைக் கொண்டுவந்து கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை ஏற்றி குடோனுக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார். பின்னர் கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகள் லாரியில் ஏற்றப்பட்டன.

 

இந்நிலையில், 10 ஆண்டு கால போராட்டத்துக்குத் தீர்வு கிடைத்துவிட்டதாக அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. கூறுகையில், “இது போராட்டமல்ல, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது” என்றார். இதுகுறித்து மண்டல மேலாளர் கோவிந்தராஜுலு கூறும்போது, “கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். “கடைக்குள் இருந்த மதுபான பாட்டில்கள் அனைத்தையும் ஏற்றி கடையை மூடிய பிறகு மாலை ஐந்து மணி அளவில் செல்வராஜ் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டார். சுமார் ஆறரை மணி நேரத்துக்கும் மேலாக எம்.எல்.ஏ. அங்கு காத்திருந்தார்” என கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.