Skip to main content

துப்பாக்கிச் சூடு விவகாரம்... திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்!

Published on 12/07/2020 | Edited on 13/07/2020

 

dmk mla

 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள இள்ளலூர் கிராமத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் வீட்டின் பின்புறம் தாண்டவமூர்த்தி, குமார் சகோதரர்களுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. தங்களது நிலத்தை விற்க வசதியாக அங்கு உள்ள அரசு நிலத்தைச் சாலை அமைக்க தாண்டவமூர்த்தி, குமார் ஆகியோர் ஆட்களுடன் வந்தாகவும், அப்போது தகவல் அறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதனைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.   



இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இந்த மோதலில்  தாண்டவமூர்த்தி, குமார் தரப்பினர் அரிவாளால் எதிர்த்தரப்பினரை வெட்டியதாகவும், இருசக்கர வாகனத்தை எரித்ததாகவும் கூறப்படுகிறது. லட்சுமிபதி தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் பதிலுக்குத் தாண்டவமூர்த்தி, குமார் தரப்பில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அந்த வழியே சென்ற சீனிவாசன் என்பவர் மீது குண்டு பாய்ந்து காயமடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இந்நிலையில் இன்று மாலை சென்னை அருகே மேடவாக்கத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ இதயவர்மனை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டில் உள்ள தனியார் மகாலில் வைத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் இந்தச் சம்பவத்தில் மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ. தரப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. செங்கல்பட்டு நடுவர் நீதிமன்ற நீதிபதி காயத்ரிதேவி உத்தரவின்பேரில் புழல் சிறையில் அவர் நீதிமன்றக் காவலில் 14 அடைக்கப்படவுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்