dmk MLA Corporation lodged a complaint at the police station!

சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி, சென்னை மாநகராட்சி பொறியாளரைத் தாக்கியதாக, சென்னை திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி.சங்கர் மீது புகார் எழுந்தது.

Advertisment

இதையடுத்து, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

Advertisment

இது தொடர்பாக, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (29/01/2022) தனித்தனியே மற்றும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவிப் பொறியாளர், சாலைப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களிடம் முறைப்படி புகார் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

அதையடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் மீது காவல்நிலையத்தில் சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது. அந்த மனுவில், சென்னை மாநகராட்சி பொறியாளரைத் தாக்கியது தொடர்பாக, தி.மு.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.