Skip to main content

’நந்தனத்தில் கூடிடுவோம்!’-திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

 

திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:    ‘’கழக வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனைமிகு வெற்றியைப் பெற்ற அந்த நன்னாளாம் மே 23ஆம் நாள் மாலையில் அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா-தலைவர் கலைஞர் அவர்களின் சிலையின் கீழ் நின்று, மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவித்தபோது, “இந்த வெற்றியைக் காண, தலைவர் கலைஞர் அவர்கள் இல்லையே” என்ற எனது இதயத்தின் ஏக்கத்தை வெளிப்படுத்தினேன்.

 

le

 

அப்போது என் நா தழுதழுத்தது. உடல் நடுக்குற்றது. எதிரில் நின்றிருந்த கழக உடன்பிறப்புகள் தந்த ஊக்கமும் உற்சாக முழக்கமும் என்னை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்ததுடன், தலைவர் கலைஞர் அவர்கள் நம்மிடையே இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டாலும், அவர் வகுத்துத் தந்த கொள்கைப் பாதையில் பயணித்துதானே, இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம் என்கிற ஆறுதலுடன், கழகம் பெற்றுள்ள மகத்தான வெற்றியைத் தலைவர்  கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன் எனத் தெரிவித்தேன்.

 

அந்த உணர்வுடன்தான், உங்களில் ஒருவனாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 1924, ஜூன் 3. பைந்தமிழக வரலாற்றின் பக்கங்களில் பதிவாகிவிட்ட நாள். எத்தனை யுகமானாலும் இதனை எவராலும் அழிக்க முடியாது என்கிற வகையில் திருக்குவளை எனும் கிராமத்தில் பிறந்து, திருவாரூரில் வளர்ந்து, திராவிட இயக்கம் எனும் மானமும் அறிவும் வளர்க்கும் கொள்கையை ஏற்று, அதனைத் தமிழ்க்கொடியாக உயர்த்தி நின்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறையும், தமிழ்நாட்டு அரசியலை சுழற்றும் அச்சாணியாக 50 ஆண்டுகளுக்கு மேலாகவும், இந்திய அரசியலில் ஜனநாயகத்திற்கும் சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் ஆபத்து உருவானபோதெல்லாம் அதனைக் கட்டிக்காப்பதில் மூத்த தலைவராகவும் விளங்கிய நம் ஆருயிர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள், ஜூன் 3.

 

ஒவ்வொரு ஆண்டும், அவரை நேரில் கண்டு வாழ்த்துகள்  பெறும், முதல் ஆளாக இருப்பேன். தந்தையைக் காணும் தனயனாக அல்ல, தலைவரைக் காணும் தொண்டனாக, அவரது கோடானுகோடி உடன்பிறப்புகளில் ஒருவனாக நேரில் வாழ்த்துகளைப் பெறும்போது யானையின் பலம் உடலிலும் உள்ளத்திலும் பரவியது போன்ற உணர்வு ஏற்படும். எனக்கு மட்டுமா? கழகத்தின் முன்னணி நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், உடன்பிறப்பே என்ற தலைவரின் ஒற்றைச் சொல்லில் கட்டுண்டு கழகம் காக்கும் தொண்டர்கள் என அத்தனை பேரும் அவர் முகம் கண்டு வாழ்த்தவும், வாழ்த்து பெறவும் வாய்ப்பினைப் பெற்றோம். ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர்  அவர்களின் கொள்கை முழக்க உரை கேட்டு நாம் மட்டுமல்ல, நாடே ஊக்கம் பெறும்.  ஜூன் 3 தலைவரின் பிறந்தநாள் என்பது, கழகத்தின் திருநாள். தமிழர்களின்  பெருநாள். 

 

தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாமல், அவரது  பிறந்தநாளை முதல் முறையாகக் கொண்டாடுகிறோம். இல்லை.. இல்லை.. நம் ஊனோடும் உயிரோடும் கலந்திருக்கின்ற தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். இயற்கையின் சதியால் அவர் நம்மிடையே இல்லாமல் இருக்கலாம். நம் உள்ளத்தில், உணர்வினில், ஒவ்வவொரு செயல்பாட்டில், இயக்கத்தில், கொள்கையில் என எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். தலைவர் கலைஞரின் நினைவின்றி நீங்களுமில்லை, நானுமில்லை. அவர் தந்த பயிற்சியால், அதனடிப்படையில் நாம் மேற்கொண்ட முயற்சியால், ஜனநாயகம் காக்கும் தேர்தல் களத்தில் தி.மு.கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. 

 

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.கழகம் உருவெடுத்திருக்கிறது. மதவாத சக்திகளின் கொடுங்கரங்களில் சிக்காமல் தமிழ்நாட்டைக் காப்பாற்றியிருக்கும் தி.மு.கழகத்தின் தேர்தல் வியூகம், மொத்த இந்தியாவையும் தெற்கு திசை நோக்கித் திரும்பிப் பார்த்திடச் செய்திருக்கிறது. தி.மு.க. வகுத்த மதச்சார்பற்ற வியூகம் என்கிற தமிழ்நாட்டின் தேர்தல் சூத்திரம், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அவசியம் என்கிற நிலை  உருவாகியுள்ளது. இத்தகைய மகத்தான வெற்றிக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு உங்களில் ஒருவனான  எனக்கு வாய்த்திருந்தாலும், இந்த வெற்றிக்கு மூலகாரணமாகவும் மூல பலமாகவும் இருப்பவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். 

 

எப்போதெல்லாம் நாட்டின் ஜனநாயகத்திற்கும் பன்முகத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்தியாவின் வடதிசை,தெற்கு திசை நோக்கிப் பார்வை செலுத்துவதும், அந்தப் பார்வையின் பொருள் உணர்ந்து, நாட்டைக் காக்கும் வெற்றி வியூகம் வகுப்பதும் தலைவர் கலைஞர் அவர்களின் அரசியல் அறமாக இருந்திருப்பதை இந்தியாவில் உள்ள எந்த இயக்கமும் மறுக்க முடியாது. தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்தளித்த அரசியல் அறத்தைக் கடைப்பிடித்து இம்முறை நாம் பெற்றிருக்கின்ற  வெற்றி, வடக்கை வியக்க வைக்கிறது. தெற்கை இணைக்க வைக்கிறது. ஒட்டுமொத்த நாட்டையும் பிரமிக்கச் செய்கிறது.

 

மகத்தான இந்த வெற்றியை தலைவர் கலைஞர் அவர்களுக்கு காணிக்கையாக்கும் வகையில் ஜூன் 3 அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர்  தலைமையில் நடைபெறும் மாபெரும் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சிக்காக சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., அவர்களும் - அவருக்கு பக்கபலமாக கழக நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். உங்களில் ஒருவனான நானும் கழக முன்னணியினரும் சிறப்புரை ஆற்றுகின்ற இப்பொதுக்கூட்டத்தில் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சித் தலைவர்களும், ஆதரவு வழங்கி வரும் அரசியல்-பொதுநல அமைப்பினரும் பங்கேற்று தலைவர் கலைஞரின் புகழையும், கழகம் பெற்றுள்ள வெற்றியின் சிறப்பையும் எடுத்துரைக்க இருக்கின்றார்கள். 

 

கழகம் நம் குடும்பம். நம் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். தலைவர் கலைஞர் நம் குடும்பத் தலைவர். அவரது பிறந்தநாள் விழா என்பது நம் வீட்டு விழா. வீட்டு விழா மட்டுமல்ல, தமிழ்நாட்டு விழா. தலைவர் கலைஞர் அவர்கள் சிறப்புரையாற்றிய பிறந்தநாள்விழா பொதுக்கூட்டங்களுக்கு எப்படி நாம் ஆர்ப்பரித்துத் திரள்வோமோ அப்படியே அவருக்கு இந்த வெற்றியைக் காணிக்கை செலுத்திடும் பெருவிழாவிலும் அனைத்து மாவட்ட கழகச் செயலாளர்களும் தங்கள்   மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர் பட்டாளத்துடன் ஆர்ப்பரித்து அணி திரண்டிட வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் அருகே ஓய்வு கொள்ளும் தலைவர் கலைஞரைத் தாலாட்டும் வங்கக் கடல் அலைகளைவிட அவரது உடன்பிறப்புகளாம் உங்களின் வருகை எனும் அலைகள் அதிகமாக இருந்திட வேண்டும். 

 

வெற்றிக்கு வியூகம் தந்த மகத்தான தலைவருக்கும், வெற்றியை நமக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்ற விழாவாகப் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சிறப்பாக அமைந்திடச் செய்வது உங்களின் ஆர்வத்திலும்  உழைப்பிலும் இருக்கிறது. அதற்கும் மேலாக, தலைவர் கலைஞர் அவர்களின் மேல் உங்களுக்கிருக்கும் பற்றின் வெளிப்பாடாக அது அமைந்திடும். 

 

மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் வெற்றியினை ஈட்டிய கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் நன்றியினை வெளிப்படுத்துவதுடன், தங்களை வெற்றி பெறச் செய்த தொகுதி முழுவதும் நன்றி அறிவிப்பு நிகழ்வுகளையும் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாக்களையும் மாதம் முழுவதும் நடத்திட வேண்டும்.

 

கழகத்தின் மாவட்டச் செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளும் ஜூன் மாதம் முழுவதும் தலைவர் கலைஞரின் மாதமாகக் கருதி, அவரது பிறந்தநாள்  விழா பொதுக்கூட்டங்கள், நல உதவிகள் வழங்கும் விழாக்கள், அறிவுசார்ந்த நிகழ்வுகள் என மக்களின் மனம் நிறைந்த தலைவர் கலைஞர் அவர்களைக் கொண்டாடிட வேண்டும்.

 

அதன் தொடக்கமாக, ஜூன் 3 அன்று நந்தனத்தில் கூடிடுவோம். வெள்ளமெனத் திரண்டு, வெற்றியின் நாயகர் கலைஞருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றியினைத் தெரிவிப்போம். நம் இலட்சியப் பயணத்தில் பெற்றுள்ள-பெறப்போகின்ற மகத்தான வெற்றிகளைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்கிடுவோம்!’’

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பரபரப்பு கடிதம்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
letter of retired IAS, IPS officers to Election Commissioner
தலைமை தேர்தல் ஆணையர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என 87 பேர் சார்பில் கூட்டாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 ஆவது பிரிவின்படி வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசும் தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் இத்தககைய செயல் அராஜகத்தில் முடியும். இது தேர்தல் நேரத்தில் பெரும் குழப்பங்களை விளைவிக்கும்.

ஊழலை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரை மத்திய அரசு பழிவாங்குவது தவறு. இது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை மறந்து உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களை போக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.