Skip to main content

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இ.பெரியசாமியின் சொந்த நிதியில் தூர்வாரப்படும் குடகனாறு!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

DMK legislator E. Periyasamy's own funds are being squandered in Kudakanar

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கத்தில் இருந்து வேடசந்தூர் வரை குடகனாறு செல்கிறது. ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆத்தூர் முதல் அகரம் வரை சுமார் 27 கி.மீட்டருக்கு குடகனாறு செல்கிறது. கடந்த 9 வருடங்களாக குடகனாறு தூர்வாரப்படாமல் இருந்தது. நீர்நிலைகள் மற்றும் குளங்களைத் தூர்வாரிய அதிகாரிகள் குடகனாற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

 

இதனால் சுமார் 4 ஆயிரம் நிலப்பரப்புள்ள விளைநிலங்களில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. அப்பகுதி விவசாயிகள் தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமியிடம் குடகனாற்றை தூர்வாரச் சொல்லி வேண்டுகோள் விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் இ.பெரியசாமி, தனது சொந்த நிதியில் சுமார் ரூ.90 லட்சம் மதிப்பில் குடகனாற்றை தூர்வார உத்தரவிட்டார். அதன்படி பழனி சாலையில் உள்ள பாலம் ராஜக்காபட்டி பாலத்திலிருந்து தெற்கே அனுமந்தராயன்கோட்டை பாலம் வரை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

 

இதுபோல ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கம் முதல் அனுமந்தராயன்கோட்டை பாலம் வரை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆத்தூர் சொக்குப்பிள்ளை ஓடையிலிருந்து அகரம் வரை 27 கி.மீட்டருக்கு தூர்வாரும் பணி நடைபெறுகிறது. தூர்வாரும் பணியை ரெட்டியார் சத்திரம் ஒன்றியத் தலைவர் கு.சத்தியமூர்த்தி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் முருகேசன், சித்தலகுண்டு, பொன்னிமாந்துரை நீர்ப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் வி.ஜோசப் அருளானந்தம் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம்.இன்பராஜ், மாவட்ட பொறியாளர் அணி செந்தில்குமார், குட்டத்துப்பட்டி ஊராட்சி பாலம்பாண்டி, மாவட்ட கவுன்சிலர் ராஜகணேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் ராயப்பரமேஷ், விவசாயிகள் சங்க துணை தலைவர் சேசுராஜ் மற்றும் மலைச்சாமி, ரவிசங்கர் உட்பட தி.மு.க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

DMK legislator E. Periyasamy's own funds are being squandered in Kudakanar

 

தூர்வாரும் பணிகள் குறித்து சிந்தலகுண்டு மற்றும் தாமரைக்குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வி.ஜோசப் அருளானந்தம் கூறுகையில் “கடந்த 9 வருடங்களாக அ.தி.மு.க ஆட்சியில் கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரிடமும் தூர்வாரச் சொல்லி மனு கொடுத்தோம். எவ்வித பயனும் இல்லை. ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினருமான இ.பெரியசாமி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தவுடன் தனது சொந்தச் செலவில் விவசாயிகள் நலன் காக்க சுமார் ரூ.90 லட்சம் செலவில் தூர்வார உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆத்தூரில் இருந்து 15 கி.மீ தூரமுள்ள 360 ஏக்கர் நீர்பிடிப்பு உள்ள தாமரைக் குளத்திற்கு தண்ணீர் வருவதோடு, அதன் அருகே உள்ள அவுதார்குளம், ஐந்தான்குளம், அணைப்பட்டி குளம், கோட்டூர் ஆவராம்பட்டி குளம், வேலாசமுத்திரம் குளம் உட்பட 10க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி, மீண்டும் தண்ணீர் குடகனாற்றில் வந்து காவிரி வரை இந்த தண்ணீர் செல்லும். எங்களுடைய நீண்டநாள் கனவான குடகனாற்றை தூர்வாரிக் கொடுக்கும் தி.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி அவர்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்” என்றார்.

 

Ad

 

ஆத்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் கூறுகையில், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தி.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி அவர்கள் ஆத்தூரில் உள்ள கருங்குளம், நடுக்குளம் உட்பட பல்வேறு குளங்களை தூர்வாரி கொடுத்து விவசாயிகள் நலன் காத்தார். இன்று சொந்தச் செலவில் ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கத்தில் இருந்து ஆத்தூர் தொகுதி எல்லை வரை குடகனாற்றை தூர்வார உத்தரவிட்டுள்ளார். தி.மு.க நிர்வாகிகள் மற்றும் குடகனாறு பாசன விவசாயிகள் அந்தந்த பகுதியில் நின்று தூர்வாரும் பணியைக் கண்காணித்து வருகின்றனர்” என்றார். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப தொகுதி மக்களின் நலன் கருதி தனது சொந்தச் செலவில் சுமார் ரூ.90 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியைச் செய்து வரும் தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமியின் இந்தப் பணி பாராட்டுக்குரியது என்று சமூக ஆர்வலரும், விவசாயிகளும் சட்டமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினர் இ.பெரியசாமியை பாராட்டியுள்ளனர். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.