கரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் இந்தியா முழுவதும் போடப்பட்ட 144 தடை உத்தரவால் நாடே முடங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள், ஏழை மக்கள் என பல தரப்பினரும் வேலையில்லாததால், வருமானம் இன்றி, உணவுக்கு வழியில்லாமல் தவித்தனர். மக்களின் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு உதவ திமுக களமிறங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி, மாவட்டங்களில் திமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உதவிகள் செய்ய துவங்கினர். அதனை ஒன்றிணைவோம் வா என்கிற திட்டத்தின் கீழ் ஒரு கைபேசி எண்ணை மக்களுக்கு தந்து, உதவி வேண்டுவோர் தொடர்பு கொண்டால் உதவிகள் தேடிவரும் என்றனர்.
தொலைபேசி வழியாக உதவி பொருட்கள் கேட்டவர்களுக்கு மளிகை பொருட்களும், ஆதரவற்றவர்களுக்கு உணவுகளும் வழங்கினர். இந்நிலையில் தொலைபேசி வாயிலாகவும், ஒன்றிணைவோம் வா என்கிற திமுக திட்டத்தின் இணையத்தில் பொதுமக்கள் அரசு உதவி வேண்டி கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கைகள் அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடிந்தவையாக இருந்தன. இரண்டு வாரத்துக்கு முன்பு பொதுமக்கள் அனுப்பிவைத்த மனுக்களில் 1 லட்சம் மனுக்களை தமிழக அரசின் தலைமை செயலாளரை சந்தித்து திமுக எம்.பிக்கள் குழு வழங்கியது. தற்போது இரண்டாவது கட்டமாக தங்களிடம் வந்துயிருந்த 6,23,914 கோரிக்கை மனுக்களை முதலமைச்சரின் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளன்ர்.
அதேபோல் திமுக மாவட்ட செயலாளர்கள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் இந்த மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மே 29ந் தேதி தந்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மனுக்களை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், ஆட்சித்தலைவர் கந்தசாமியிடம் வழங்கினார்கள். இராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட மனுக்களை இராணிப்பேட்டை காந்தி எம்.எல்.ஏ தலைமையில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்கன் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் நேரில் சென்று வழங்கினர்.
திமுகவிடம் வந்துள்ள மனுக்கள், அரசிடம் வழங்கிய மனுக்களின் விவரங்கள் அனைத்தும் www.ondrinaivomvaa.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக 18 லட்சம் உதவி அழைப்புகள் வந்தன, அதில் முதல் கட்டமாக ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களையும், தற்போது 6.20 லட்சம் கோரிக்கை மனுக்களை அரசிடம் வழங்கியது திமுக. மீதி 11 லட்சம் அழைப்புகள், ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் கேட்டு வந்த உதவி அழைப்புகள், அப்படி உதவி கேட்டவர்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது என்கிறது திமுக தரப்பு.
அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும் என்கிற கோரிக்கை மனுக்களையே, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது திமுக. நாங்கள் எதிர்கட்சியாக இருந்தாலும், எங்களை நம்பி இவ்வளவு கோரிக்கை மனுக்கள் வந்துள்ளது, தமிழக மக்கள் பெருந்துயரத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகும். இந்த மனுக்களை அரசிடம் தந்துள்ளோம், அதன் மீது நடவடிக்கை எடுக்கவைக்க திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தொடர்ந்து முயற்சி செய்வார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.