Skip to main content

தி.மு.க. முன்னாள் பிரமுகர் உள்ளிட்ட இருவருக்கு சரமாரி கத்திக்குத்து!

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

dmk leaders incident police investigation

 

சேலம் அருகே, தி.மு.க. முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட இருவரை மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் உடையாப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 31). தி.மு.க.வில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக்கூறி, அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த மார்ச் 22- ஆம் தேதி கட்சி மேலிடம் டிஸ்மிஸ் செய்தது. 

 

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நாகராஜனும், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அவருடைய நண்பரும் பாமக பிரமுகருமான பிருத்விராஜன் (வயது 42) என்பவரும் சங்ககிரியில் இருந்து சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் அருகே வந்தபோது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். 

 

இந்த தாக்குதலில் நாகராஜன், பிருத்விராஜன் ஆகிய இருவருக்கும் உடலில் பல இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இது ஒருபுறம் இருக்க, கடந்த மார்ச் மாதம் தி.மு.க. பிரமுகர் ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவருடைய புகார் மனு, அம்மாபேட்டை காவல்நிலையத்தில் விசாரணையில் உள்ளது. 

 

இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. பிரமுகர்கள் உள்ளிட்ட பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்துவிட்டு நாகராஜன் ஏமாற்றியதாகவும், பலருடைய கார்களை சினிமா படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் எனக்கூறி பெற்றுச்சென்று, அவர்களுக்குத் தெரியாமல் அடமானம் வைத்து மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. 

 

நாகராஜன் மீதான மோசடி புகார்களும், அம்மாபேட்டை காவல்நிலையத்தில் விசாரணையில் உள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக, பாதிக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் நாகராஜனை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

 

சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற வாகனங்கள், இளைஞர்கள் ஆகியோர் முகங்கள் எங்கேயாவது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நாகராஜன், பிருத்விராஜன் ஆகியோரின் செல்போன்கள் மூலம் பேசப்பட்ட அழைப்புகள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.