Skip to main content

"எனக்கு ஸ்பின்னிங் மில் இருக்கிறது, பைனான்ஸ் வைத்திருக்கிறேன் எனச் சொல்வதும் பொய்"- எ.வ.வேலு பேட்டி...

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

dmk leader velu pressmeet at thiruvannamalai district


திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஒரு ஆடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த ஆடியோவில் இருவர் பேசிக் கொள்கின்றனர். அதில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க.வின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவின் சொத்து பட்டியல் குறித்தும், அவரது மகனும் தி.மு.க.வின் மருத்துவரணி மாநில துணை தலைவருமான டாக்டர். கம்பன் குறித்தும் அந்த ஆடியோவில் பேசப்படுகிறது. வீடியோ தொலைக்காட்சிகள் சிலவற்றிலும், சில செய்தித் தாள்களிலும் வெளியாகி சூடாக விவாதிக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் பிப்ரவரி 6- ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ.வேலு, "சில இணைய தளங்களில், தொலைக்காட்சிகளில் ஒரு ஆடியோ ஒளிப்பரப்பாகிறது. அது முற்றிலும் பொய்யான தகவல்களைக் கொண்டது. நான் தி.மு.க.வுக்கு வருவதற்கு முன்பே பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகிறேன். பின் தங்கிய மாவட்டமான இங்கு மக்கள் கல்வி வளர்ச்சிப் பெற வேண்டும் என்பதற்காக அறக்கட்டளை வழியாக அந்த கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு ஏழைகள் கல்வி நிலை உயர பாடுபடுகிறது. இந்தியன் வங்கியில் 130 கோடி ரூபாய் கடன் வாங்கி மருத்துவமனைக் கட்டப்பட்டு வருகிறது.

 

எனக்கு ஸ்பின்னிங் மில் இருக்கிறது, பைனான்ஸ் வைத்திருக்கிறேன் எனச்சொல்வதும் பொய். தமிழகத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது எனச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது என் மீது வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக 11 லட்ச ரூபாய் கணக்கு காட்டவில்லை, இந்த நிதி எப்படி வந்தது என வழக்கு தாக்கல் செய்ய வைத்தார். அது சென்னையில் உள்ள என் வீட்டில் என் உதவியாளர், கார் ஓட்டுநர் தங்குவதற்காக அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம், அதனை கணக்கு காட்டியுள்ளேன் என கீழ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன், அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டேன். அது மேல்முறையீடாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்று அங்கும் விடுவிக்கப்பட்டேன். எனக்கு முன்பு உணவுத்துறை அமைச்சராக இருந்தவர்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி அரசியல் வாழ்வு முற்றுப்பெற்றவர்கள். நான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது பொதுவிநியோக திட்டம் தமிழகத்தில் செயல்படும் முறையை உச்சநீதிமன்ற நீதிபதிகளே பாராட்டினார்கள்.

 

பொதுவாழ்க்கையில் நேர்மையாக, மக்கள் தொண்டாற்றும் வகையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன், மதத்திற்கு அப்பாற்பட்டு அருணை தமிழ் சங்கம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்காலம் சொன்னது போல் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என தூய்மை அருணை திட்டம், மாணவர்களுக்கு தளபதி (ஸ்டாலின்) பெயரில் இலவச கணினி மையம், இலவச தையல் பயிற்சி மையம் நடத்திக் கொண்டு வருகிறேன். தீப திருவிழாவிற்கு வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு அறக்கட்டளை மூலம் மூன்று வேளை உணவு, தங்குமிடம் வழங்கி வருகிறோம். பொது வாழ்க்கையில் தூய்மையாக இருக்கிறேன்" என்றார்.

 

ஆடியோவில் பேசிய தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறதே என நாம் கேள்வி எழுப்பிய போது, "அதுப் பற்றி எனக்கு தெரியாது" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.