Skip to main content

"ஓட்டுக்கு எவ்ளோ தருவீங்கன்னு கேட்டாங்க" - ஐ.டி. ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

dmk leader velu pressmeet income tax raid

 

தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலுவின் வீடு, கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்கள் என சுமார் 10- க்கும் மேற்பட்ட இடங்களில் 100- க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த மார்ச் 25, 26 -ஆம் தேதிகளில் சோதனை செய்தனர்.

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்திலேயே இந்தச் சோதனை நடைபெற்றது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு பிரச்சாரம் முடித்துவிட்டு வந்த தி.மு.க. தலைவரின் வாகனத்திலும் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சோதனையை மார்ச் 26- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நிறைவுசெய்தனர்.

 

சோதனை குறித்து வருமானவரித்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்காத நிலையில், தி.மு.க. மாவட்டச் செயலாளரும், வேட்பாளருமான எ.வ.வேலு மற்றும் தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசகர், மூத்த வழக்கறிஞர் விடுதலை ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

 

dmk leader velu pressmeet income tax raid

 

அப்போது எ.வ.வேலு கூறியதாவது, "திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிடுகிறது. நான் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறேன். அதோடு வடமாவட்டங்களில் உள்ள வேறு சில தொகுதிகளுக்கும் பிரச்சாரத்துக்குச் செல்கிறேன். என்னை முடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ரெய்டுக்கு டெல்லி உத்தரவிட்டுள்ளது. இங்கு என்னை எதிர்த்துப் போட்டியிடுபவர் பா.ஜ.க. வேட்பாளர். அவரை வெற்றிபெற வைப்பதற்காகவும் டெல்லி இப்படியொரு ரெய்டை நடத்தியுள்ளது. எங்கள் குடும்பம் அறக்கட்டளை வைத்துள்ளது, கல்விச் சேவை செய்கிறது. அதுகுறித்து கேள்வி எழுப்பாமல் தேவையற்ற கேள்விகளை எழுப்பினார்கள். ஓட்டுக்கு எவ்வளவு தரப்போகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.

 

வருமான வரித்துறை என்பது அம்பு தான், அதை ஏவியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். இந்த திருவண்ணாமலை மண் திராவிட மண், இது ஆன்மிகமும், திராவிடமும் இணைந்தது. அதனால் தான் அண்ணாமலையார் கோயிலை தி.மு.க. தலைவர் மீட்டார், பா.ஜ.க. அதனை முடக்க திட்டமிட்டது. இந்தச் சோதனை மூலம் என்னை இரண்டு நாள் முடக்கிவிட்டார்கள். இந்த இரண்டு நாளை ஈடுகட்டும் விதமாக இரவு, பகல் ஓய்வு இல்லாமல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு 8 தொகுதிகளிலும் உதயசூரியன் வெற்றிபெற உழைப்பேன்" என்றார்.

 

dmk leader velu pressmeet income tax raid

 

அதன் பின்னர் மூத்த வழக்கறிஞர் விடுதலை கூறியதாவது, "தேர்தல் காலகட்டத்தில் இதுபோன்ற ரெய்டுகள் நடத்துவது சட்ட விரோதமானது. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க.வை சேர்ந்தவர் தான் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவருக்குச் சாதகமாகச் செயல்படவே மத்திய அரசு, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருமான வரித்துறையை ஏவியுள்ளது.

 

வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ரெய்டு செய்வதற்குப் வெவ்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். ஆடியோவில் ஒருவர் பேசினார், அதனை அடிப்படையாகக் கொண்டு சோதனைக்கு வந்தோம் என்றார்கள். அது நடந்தது பிப்ரவரி 2- ஆம் தேதி. அன்று முதல் இன்று வரை என்ன செய்துகொண்டு இருந்தார்கள். அல்லது தேர்தல் முடிந்த பிறகு நடத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இப்படிச் செய்வது சட்ட விதிகளுக்கு முரணானது என ஆடியோ குறித்துக் கேள்வி எழுப்பியதும், எங்களுக்குப் பணம் இருப்பதாக தகவல் வந்தது எனக் குறிப்பிட்டார்கள். ஆனால், அதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை.

 

dmk leader velu pressmeet income tax raid

 

ஆக மத்தியில், ஆளும் அரசு தங்களது அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளது. பணம் கைப்பற்றப்பட்டதாக தவறான தகவலைப் பரப்பினார்கள். இது அவரின் பெயரைத் தவறாகப் பரப்பவே செய்துள்ளனர். இதனால்தான், இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் தெரிவித்துள்ளோம். வாக்கு எண்ணிக்கை முடிவுக்குப் பிறகு இதுகுறித்து நீதிமன்றம் நாடுவதா அல்லது கைவிடுவதா என்பதைப் பின்னர் ஆலோசித்து முடிவுசெய்வோம்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.