Skip to main content

திமுக வழக்கறிஞர் சரமாரி வெட்டிக்கொலை; 6 பேர் கும்பல் வெறிச்செயல்

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

DMK lawyer incident; 6 Gang of Maniacs

 

நாமக்கல் அருகே, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞரை வழிமறித்த ஆறு பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள வரகூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (41). வழக்கறிஞர். இவர் அலுவல் தொடர்பாக நவ. 3ம் தேதி நாமக்கல் சென்று இருந்தார். பணிகளை முடித்துவிட்டு, அன்று இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 8.30 மணியளவில் செல்லிப்பாளையம் ஏரிக்கரை அருகே உள்ள கஸ்தூரிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் அவரை வழிமறித்துள்ளனர்.

 

அவர்களைப் பார்த்து கலக்கம் அடைந்த மணிகண்டன், அவர்களிடம் இருந்து வேகமாக தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள், அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து நிகழ்விடத்திலேயே பலியானார். அவர் உயிரிழந்து விட்டதை உறுதி செய்து கொண்ட பின்னரே கொலைகார கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த எருமைப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தை மீட்டு, கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல்துறை எஸ்பி ராஜேஷ்கண்ணன், டிஎஸ்பி தனராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எருமைப்பட்டி காவல் ஆய்வாளர் சுமதி, எஸ்ஐ பாலமுருகன் மற்றும் காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

கொலையுண்ட மணிகண்டன் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார். பின்னர் அங்கிருந்து விலகி, திமுகவில் இணைந்து கொண்டார். கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டாரா?, பெண் விவகாரத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

 

மணிகண்டனுக்கு ஸ்வேதா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது ஸ்வேதா, நிறைமாத கர்ப்பிணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.